சின்னாளபட்டி : சின்னாளபட்டி பகுதியில் திடீரென பெய்யும் மழையால் சுங்குடி சேலைகளில் கஞ்சி ஏற்றி காய வைக்க முடியாமல், அதன் உற்பத்தி பாதிப்படைந்து வருகிறது.
சின்னாளபட்டி சுங்குடி நகரம் என பெயர் பெற்ற ஊராகும். சராசரியாக மாதந்தோறும் சின்னாளபட்டியில் இருந்து சுமார் 10 ஆயிரம் சுங்குடி சேலைகளை (காட்டன் சேலைகள்) உற்பத்தி செய்து வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைத்து வந்தனர்.
வருடத்திற்கு ஒருமுறை ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்கள் சுங்குடி சேலை உற்பத்தி அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு கோடை காலத்திலும் மழை பெய்ததால் சுங்குடி சேலைகளை காய வைத்து, அவற்றில் உள்ள பிரிண்டிங் மையின் ஈரத்தை உணர வைத்து, அதில் கஞ்சியை ஏற்றி உணர வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போதும் திடீர், திடீரென மழை பெய்து வருவதால் சுங்குடி சேலைகளில் கஞ்சி ஏற்றி உணர வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சுங்குடி சேலைகளை தேய்க்கும் தொழிலாளிகள் கூறுகையில், ‘கோடைகாலத்தில் ஒரு நாளைக்கு 3 முதல் 4 சேலைகளில் கஞ்சி ஏற்றி காய வைத்து அதற்கு தண்ணீர் தெளித்து பதம் ஏற்படுத்தி தேய்த்து கடைகளுக்கு அனுப்பி வந்தோம். தற்போது மழை விட்டு விட்டு வருவதால் ஒரு சேலையை முறையாக காய வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வருடத்திற்கு ஒருமுறை தான் அதிக வேலை இருக்கும். தற்போது அந்த காலகட்டத்திலும் மழை பெய்து வருவதால் எங்களால் சுங்குடி சேலைகளுக்கு கஞ்சி ஏற்றி காய வைக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது’ என்றனர்.