×

புதுவையில் மீண்டும் பயங்கரம் வெடிகுண்டு வீசி ரவுடி படுகொலை-2 நண்பர்கள் படுகாயம்: மர்ம கும்பலுக்கு வலை

புதுச்சேரி : புதுச்சேரியில் வீடு புகுந்து வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் ரவுடி படுகொலை செய்யப்பட்டார். 2 நண்பர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி மேட்டுப்பாளையம் அருகே சண்முகாபுரம் வடக்கு பாரதிபுரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (24). ரவுடியான இவர், தனது வீட்டில் நண்பர்கள் சக்தி (20), பாலாஜி உள்ளிட்டோருடன் நேற்றிரவு மது குடித்து விட்டு, பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது இரவு 10 மணியளவில் மர்ம கும்பல் அங்கு வந்தது. பன்னீர்செல்வத்தின் வீட்டினுள் புகுந்து, திடீரென நாட்டு வெடிகுண்டுகளை வீசியது.

பின்னர், பன்னீர்செல்வம் மற்றும் உடனிருந்த 2 நண்பர்களையும் அரிவாளால் சரமாரி வெட்டியது. இதில் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு வந்தனர். 3 பேரையும் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக பன்னீர்செல்வம் ஜிப்மர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். சக்தி, பாலாஜி ஆகியோருக்கு கதிர்காமம் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்த எஸ்.பி. பக்தவத்சலம், கோரிமேடு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். இச்சம்பவம் குறித்து கோரிமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட பன்னீர்செல்வத்துக்கும், மூலகுளத்தை சேர்ந்த ஜான்டீ என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் ஜான்டீ கும்பல் தான் அவரை தீர்த்துக் கட்டியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து அந்த கும்பலை தேடி வருகின்றனர். புதுச்சேரியில் மீண்டும் வெடிகுண்டு கலாசாரம் தலை தூக்கி இருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Puduvai , Puducherry: In Puducherry, a raider was murdered after breaking into a house and throwing a bomb and cutting it with a sickle. 2 friends seriously injured
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...