×

எடப்பாடி உண்மை இல்லாதா செய்தியை அறிக்கையாக விட்டிருக்கிறார் சேதமடைந்த அரிசி அனுப்பவில்லை: அமைச்சர் சக்கரபாணி தகவல்

சென்னை: எடப்பாடி பழனிச்சாமி உண்மைக்கு புறம்பான செய்தியை ஆராயாமல் அறிக்கையாக விட்டிருக்கிறார் என்று உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.

இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி பதிலளித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 92.50 கோடி கிலோ அரிசி மனிதர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதைப் பார்த்த இந்திய உணவுக்கழக அதிகாரிகள் இது போன்ற அரிசியை வழங்கிய அரிசி ஆலை முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த அரிசியை மனிதப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததாக உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டுள்ளது. துறை சம்பந்தமாக செய்தியாளர் சந்திப்பின் போது பதில் சொல்லிக் கொள்ளலாம் என்றிருந்தேன். அதற்குள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உண்மைக்குப் புறம்பான செய்தியை ஆராயாமல் அதையே அறிக்கையாக விட்டிருக்கிறார்.

இந்திய உணவுக் கழகத்திடமிருந்து வந்த கடிதத்தில்,  கும்பகோணத்தில் 92.50 மெட்ரிக் டன், அதாவது  92 ஆயிரத்து 500 கிலோ அரிசி இதன் மதிப்பு சுமார் ரூ.33 லட்சம் ஆகும். இந்த அரிசியில் 5.2% சேதமடைந்த அரிசி என்றும், 7% பழுப்பு நிற அரிசி என்றும் சேதமடைந்த அரிசி 5%  விழுக்காடுக்கு மேல் இருக்கக் கூடாது. ஆனால் பழுப்பு நிற அரிசி 7% இருக்கலாம் என்றும் 0.2% கூடுதலாக சேதமடைந்து உள்ளது என்பதால் பொதுமக்களுக்கு அனுப்பக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த அரிசியை அனுப்பிய ஆலைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 92,500 கிலோ என்பதை 9 லட்சம் டன் அரிசி என்று ஒரு முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் அறிக்கை விடுகிறார் என்றால் என்னவென்று சொல்வது? தஞ்சாவூரில் உள்ள முன்னாள் அமைச்சர் காமராஜிடம் உண்மை நிலை என்னவென்று கேட்டிருக்கலாம் அல்லது வைத்திலிங்கம் அவர்களையாவது கேட்டிருக்கலாம். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று உண்மைக்குப் புறம்பான செய்தியைத் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி வகித்த பதவிக்கும் தற்போது வகிக்கும் பதவிக்கும் இது அழகல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Edappadi ,Minister ,Chakrapani , Edappadi, Report, Damaged Rice, Minister Chakrapani
× RELATED எடப்பாடி தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம்