×

கஞ்சா விற்ற 4 பேர் கைது

ஆவடி: ஆவடி அருகே நேற்று முன்தினம் மாலை டேங்க் பேக்டரி காவல்நிலைய உதவி ஆய்வாளர்  விமலநாதன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் பைக்கில் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த 4 பேரை மடக்கி பிடித்தனர். பின்னர்,  அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில், விற்பனைக்காக 1.5 கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

விசாரணையில் அவர்கள் கொள்ளுமேடு பகுதியை சேர்ந்த பெயிண்டர்  சரவணன் (24), மோரை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த விக்னேஷ்குமார் (21), ராஜசேகர்(30), ஆரிக்கம்பேட்டை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் காட்டுப்பூச்சி (எ) வனிஷ்வர்(18) எனத் தெரியவந்தது. மேலும், இவர்கள் ஆந்திராவில் இருந்து பைக்கில் மொத்தமாக கஞ்சா கடத்தி வந்து, ஆவடி பகுதிகளில் பொட்டலங்களாக மாற்றி சில்லறை விற்பனையில் ஈடுபட்டு வந்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது.


Tags : Sale of marijuana, arrest
× RELATED புதுக்கோட்டை அருகே வழக்கு...