அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா சின்னதாராபுரத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர், தனது தந்தை இறந்த நிலையில் வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். இதற்கு தாசில்தார் ராஜசேகரன் (47), ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுபற்றி கரூர் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு பழனிசாமி தகவல் தெரிவித்தார். அவர்கள் அறிவுரையின் பேரில், பழனிசாமி நேற்று தாலுகா அலுவலகத்திற்கு சென்று, தாசில்தார் ராஜசேகரனிடம் ரசாயனம் தடவிய ரூ.10ஆயிரத்தை கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்திற்குள் புகுந்து தாசில்தார் ராஜசேகரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த தாசில்தாரரின் கார் டிரைவர் சுரேந்திரனும் (27) கைது செய்யப்பட்டார். தொடர்ந்து இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.