×

திருமணம் ஊராட்சியில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடம்: எம்எல்ஏ கிருஷ்ணசாமி திறந்து வைத்தார்

திருவள்ளூர்: பூந்தமல்லி ஒன்றியம், திருமணம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 113 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 8 வகுப்பறைகள் உள்ள இந்த பள்ளியில் 2 வகுப்பறைகள் சேதமடைந்துள்ளன. எனவே பள்ளிக் கட்டிடத்தை சீரமைக்க பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமியிடம் பள்ளி நிர்வாகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.  

இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் நடுநிலைப்பள்ளிக்கு புதிதாக கட்டிடம் கட்டி தரப்படும் என தேர்தல் நேரத்தில் திமுக  வேட்பாளராக ஆ.கிருஷ்ணசாமி வாக்குறுதி அளித்தார். இதை தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்றவுடன் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஷியாம பிரசாந் முக்கர்ஜி ரூர்பன் திட்டம் மூலம் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் நடுநிலை பள்ளி கட்டிடம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில் பள்ளிக் கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவிற்கு பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி தலைமை வகித்து ரூ.14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடத்தை திறந்து வைத்தார். திமுக ஒன்றிய செயலாளரும், மாவட்ட ஊராட்சி குழு துணை பெருந்தலைவருமான டி.தேசிங்கு, ஒன்றிய குழு துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயஸ்ரீ மகா, திமுக ஒன்றிய நிர்வாகிகள் கட்டதொட்டி எம்.குணசேகரன், பா.கந்தன், ஜி.சுகுமார், சி.அண்ணாகுமார், ஜிசிசி.கருணாநிதி, சித்துக்காடு முனிவேல், ஜெ.சாக்ரடீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சித் தலைவர் ராதிகா வீரன் வரவேற்றார்.  இதனைத் தொடர்ந்து  பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதில் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ பேசும்பொழுது, மாணவ, மாணவிகள் நன்றாக படிக்க வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சொல்லும் அறிவுரைகளை கேட்டு நடந்து கொண்டால் வாழ்க்கையில் முன்னேறலாம். தமிழக முதல்வரின் தீவிர முயற்சியால் தற்போது தனியார் பள்ளிகளைவிட விட அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகளவில் நடைபெற்று வருகிறது. இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதில் ஒன்றிய ஆணையர் ஜி.பாலசுப்பிரமணியன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ, வட்டார கல்வி அலுவலர் முகமது அனி சுல்கத் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமையாசிரியை பி.பூங்கொடி நன்றி கூறினார்.

Tags : MLA Krishnaswamy ,Varna Panchayat , Marriage Panchayat, School Building, MLA Krishnasamy
× RELATED முக்கொம்பு கொள்ளிடத்தில் உடைந்த...