கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணன்கோட்டையில் 380 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கண்ணன்கோட்டை உள்ள ஈசா ராஜன் ஏரியை தேர்வாய் ஏரியோடு இணைத்து கண்ணண்கோட்டையில் நீர்தேக்கம் அமைத்து இதன் மூலம் 1 டிஎம்சி தண்ணீரை தேக்கி, சென்னை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு செல்லும் வகையில் 2010ம் ஆண்டு திட்டமிட்டு கண்ணன்கோட்டையில் 850 ஏக்கர் பட்டா நிலம் உள்ளிட்ட 1500 ஏக்கர் விவசாய நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து கடந்த 2020ஆம் ஆண்டு சென்னையின் குடிநீர் தேவைக்காக கண்ணன்கோட்டை நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டது. வடகிழக்கு பருவ மழையில் முழுவதும் நிரம்பியிருந்த ஏரியில் நீர்மட்டம் மெல்ல சரிந்து நீர்இருப்பு 90%இருந்தது. கடந்த சில தினங்களாக ஆந்திராவில் இருந்து வந்த கிருஷ்ணா நதிநீர் பூண்டி ஏரிக்கு அனுப்பாமல் கண்ணன்கோட்டை ஏரிக்கு திருப்பி விடப்பட்டது. இந்த நிலையில் 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை ஏரி 3 மாதங்களுக்கு பிறகு இன்று முழு கொள்ளளவான 500 மில்லியன் கனஅடியை எட்டியது. ஏரிக்கு தற்போது 225 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.
முழு கொள்ளளவை கண்ணன்கோட்டை ஏரி எட்டிய நிலையில் ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்தில் 210 கனஅடி இங்கு அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய உபரி நீர் போக்கி வழியாக வெளியேறிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து கிருஷ்ணா நதிநீர் ஏரிக்கு வரும் நிலையில் முழுவதுமாக கலங்கல் மூலமாக உபரிநீராக வெளியேற்றப்படுகிறது. வெளியேற்றப்படும் தண்ணீரால் கரடிபுத்தூர், பெரிய புலியூர், பூவலம்பேடு, சூரவாரிகண்டிகை உள்ளிட்ட பகுதிகளில் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.