சென்னை: சவுத் ஸ்டார் ரயில் நிறுவன தலைமை திட்ட அதிகாரி ரவி சங்கர் வெளியிட்ட அறிக்கை:
உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், இந்திய ரயில்வே துறையின் புதிய திட்டத்தின் முன்னோட்டமாக தமிழகத்தில் சவுத் ஸ்டார் ரயில் என்னும் ரயில் நிறுவனம் கோயம்புத்தூர் முதல் ஷீரடி வரை முதல் யாத்திரை பயணத்தை முடித்துள்ளது. ஜூலை மாதம் தொடங்கி வரும் டிசம்பர் வரை பல்வேறு சுற்றுலாக்களை சவுத் ஸ்டார் ரயில் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, சென்னையில் இருந்து ராமேஸ்வரம், திருச்செந்தூர், மேல்மருவத்தூர், சபரிமலை, திருப்பதிக்கும், கோவையில் இருந்து ஷீரடி என ஆன்மிக தலங்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் செல்ல சவுத் ஸ்டார் ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், சென்னை - ராமேஸ்வரத்திற்கு வரும் 27ம் தேதியும், ஆக.30 தேதியும், செப்டம்பர் 24 தேதியும், சென்னை - திருச்செந்தூருக்கு வரும் 30ம் தேதியும், செப்டம்பர் 3ம் தேதியும், நவம்பர் 5ம் தேதியும், கோவை - ஷீரடிக்கு ஆகஸ்ட் 5ம் தேதியும், செப்டம்பர் 30ம் தேதியும், அக்டோபர் 25ம் தேதியும், டிசம்பர் 27ம் தேதியும், சென்னை - சபரிமலைக்கு ஆகஸ்ட் 18ம் தேதியும் செல்ல உள்ளது. இதுகுறித்து www.southstarrail.com என்ற இணையதளத்திலும், 1800 210 2991 இலவச அழைப்பிற்கு தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.