சென்னை: உளவுத்துறை ஐஜி உள்பட 7 அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். மத்திய அரசு பணியில் இருந்து திரும்பிய செந்தில்வேலன், புதிய உளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளர்.
இது குறித்து உள்துறைச் செயலாளர் பணீந்திரரெட்டி வெளியிட்டுள்ள உத்தரவு:
மத்திய அரசு பணியில் இருந்து தமிழக அரசு பணிக்கு திரும்பியுள்ள டாக்டர் செந்தில்வேலன், உளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவியில் இருந்த ஆசியம்மாள், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் கூடுதல் எஸ்பியாக இருந்த சமய் சிங் மீனா, பதவி உயர்வு பெற்று 10வது தமிழ்நாடு சிறப்புக்காவல்படையின் எஸ்பியாகவும், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் கூடுதல் எஸ்பியாக இருந்த கிரன் ஸ்ருதி, சென்னை நகர சைபர் கிரைம் துணை கமிஷனராகவும், ஈரோடு மாவட்டம் பவானி கூடுதல் எஸ்பி தீபக் சிவாஜ், பதவி உயர்வு பெற்று ஆவடி 5வது பட்டாலியன் கமாண்டன்ட்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் கூடுதல் எஸ்பி கர்ஷ் சிங், பதவி உயர்வு பெற்று வடசென்னை போக்குவரத்து துணை கமிஷனராகவும், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கூடுதல் எஸ்பி சாய் பிரனீத், பதவி உயர்வு பெற்று பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பியாகவும், பூக்கடை துணை கமிஷனராக உள்ள மகேஷ்வரன், மனித உரிமை ஆணைய எஸ்பியாகவும், வடசென்னை போக்குவரத்து துணை கமிஷனராக உள்ள ஆல்பர்ட் ஜான், பூக்கடை துணை கமிஷனராகவும், ஆவடி 5வது பட்டியாலன் கமாண்டன்ட்டாக உள்ள ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய எஸ்பியாகவும், சென்னை சைபர்கிரைம் துணை கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய், திருவல்லிக்கேணி துணை கமிஷனராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த கண்ணன், போலீஸ் நவீன மயமாக்கல் உதவி ஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 கூடுதல் எஸ்பிக்களுக்கு எஸ்பிக்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 7 போலீஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாசுக்கு உதவியதாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த கண்ணனுக்கு தற்போது பதவி வழங்கப்பட்டுள்ளது.