×

காலூர் ஊராட்சியில் பொன்னியம்மன் கோயில் ஆடித்திருவிழா

காஞ்சிபுரம், : காஞ்சிபுரத்தை அடுத்த காலூர் ஊராட்சி வேடல் கிராம ஏரிக்கரை அருகேயுள்ள ஸ்ரீசெல்லியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. இக்கோயில், கடந்த ஜனவரி மாதம் திருப்பணி தொடங்கி எட்டு கால் மண்டபம் மற்றும் செல்லியம்மன் மூலவர் கோபுரம் புனரமைக்கப்பட்டு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கு பிறகு முதல் ஆடி மாதம் செவ்வாய்கிழமையொட்டி 108 பெண்கள் காப்பு கட்டி பால்குடம் தலையில் சுமந்து கிராம வீதிகளில் ஊர்வலமாக வந்து செல்லியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.

மேலும், 16 கலசங்கள் நிறுவி சிறப்பு யாகம் நடைபெற்று கலச நீர்கொண்டு செல்லியம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செல்லியம்மன் சிறப்பு வாகனத்தில் மலர் அலங்காரத்தில் தீப ஆராதனையுடன் காட்சி அளித்தார். விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாலை 6 மணி அளவில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதில், காலூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags : Ponniyamman temple festival ,Kallur panchayat , Ponniyamman temple festival in Kallur panchayat
× RELATED திருவாடானை அருகே சேதமான ஊராட்சி...