×

எடப்பாடியின் முக்கிய பினாமியான கான்ட்ராக்டர் வீட்டில் ஐ.டி. ரெய்டு: 30 இடங்களில் நடந்த சோதனையில் பல நூறு கோடி மதிப்பு ஆவணங்கள் சிக்கின

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான கான்ட்ராக்டர் முருகப்பெருமாளின் வீடு, அலுவலகம் உள்பட 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல நூறு கோடிக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் எடப்பாடி மூலம் கடந்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடிக்கு மேல் கான்ட்ராக்ட் எடுத்து வரி ஏய்ப்பு செய்திருப்பதும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மதுரையை சேர்ந்தவர் ராமு. இவரது மகன்கள் முருகப்பெருமாள், சரவணப் பெருமாள். இவர்கள் 3 பேரும் சேர்ந்து ஆர்.ஆர்.இன்ப்ரா  கன்ஸ்ட்ரக்சன் என்ற அரசு ஒப்பந்த நிறுவனத்தை தொடங்கினர். ஜெயலலிதா ஆட்சியின்போது பொதுப்பணி  மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது மகன் மிதுனின் நட்பு  கிடைத்தது.
அதன்பின்னர் இவர்கள் மளமளவென பெரிய, பெரிய ரோடு  கான்ட்ராக்ட் பணிகளை எடுத்து நடத்த தொடங்கினர். பின்னர் எடப்பாடி  பழனிசாமி முதல்வரானவுடன் ஏராளமான பணிகள் இவர்களின் நிறுவனங்களுக்கு  ஒதுக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமியின் நண்பர் செய்யாத்துரையை விட  அதிகமான கான்ட்ராக்ட் இவர்களுக்குத்தான் வழங்கப்பட்டது.

அதில்  தஞ்சாவூர், பழனி, திண்டுக்கல் ஆகிய நெடுஞ்சாலை மண்டலங்களின் பராமரிப்பு  மற்றும் ரோடு கான்ட்ராக்ட் பணிகள் முழுமையாக ஒதுக்கப்பட்டது.  இந்த 3 மண்டலங்களில் இருந்து மட்டும் ரூ.2 ஆயிரம் கோடிக்கு கான்ட்ராக்ட்  வழங்கப்பட்டது. அதை தவிர செங்கல்பட்டு முதல் காஞ்சிபுரம் வரையிலான  ரூ.448.645 கோடிக்கு சாலை அமைக்கும் பணியையும் இந்த நிறுவனம் பெற்றுள்ளது.

இதை தவிர திருப்போரூர் முதல் மாமல்லபுரம் வரையிலான பழைய மாமல்லபுரம் சாலை  பணிகளும் இவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், சேலம் மாவட்டத்தில் உள்ள  அனைத்து ரோடு பணிகள், சேலம் மற்றும் கோவையில் உள்ள அனைத்து மேம்பாலம்  மற்றும் பால பணிகள் இந்த ஆர்.ஆர். இன்ப்ரா கன்ஸ்ட்ரக்சனுக்கு  வழங்கப்பட்டுள்ளது. 2011 முதல் 2021 வரை சுமார் ரூ.10 ஆயிரம் கோடிக்கு  நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை மூலம் கான்ட்ராக்ட் வழங்கப்பட்டுள்ளது.  அதில் எடப்பாடி முதல்வரான பிறகுதான் பல ஆயிரம் கோடிக்கு கான்ட்ராக்ட் எடுத்து செய்து வந்தனர்.

இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமாக மட்டுமல்லாமல் மனச்சாட்சியான  நிறுவனமாகவும் இது செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்துக்கு மதுரை,  திண்டுக்கல், தஞ்சை, சென்னை, செங்கல்பட்டு, சேலம், கோவை ஆகிய இடங்களிலும்  அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதை தவிர நத்தம், துவரங்குறிச்சி  பகுதிகளில் நெடுஞ்சாலை பணிகளை மேற்கொண்டு வருகிறது. தவிர, மதுரையில்  அண்ணாநகர், அவனியாபுரம், சிலைமான் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களிலும்  வெவ்வேறு நிறுவனங்கள் பெயர்களில் தனி வீடுகளை கட்டி விற்பனை செய்து  வருகின்றனர். மேலும் இந்த குடியிருப்பு வீடுகள் பராமரிப்பிலும் ஈடுபட்டு  வருகின்றன. இந்த குடியிருப்பு வீடுகள் கட்ட கட்டுமானப் பொருட்கள்  வாங்கியது, வீடுகள் விற்பனையில் பல்வேறு வரி ஏய்ப்பில்  தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக புகார்கள் எழுந்தன. மேலும் அரசு கான்ட்ராக்ட் எடுத்த விவகாரத்திலும், பெரிய அளவில் முறைகேடுகள் நடத்திருப்பதாகவும், வரி ஏய்ப்பு நடந்திருப்பதாகவும் வருமான வரித்துறைக்கு புகார்கள் எழுந்தன.

இதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் 30  இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையை நடத்தினர். அதில் மதுரை  விசாலாட்சிபுரம், கலைநகர், கே.கே.நகர், கூடல்நகர், கோச்சடை ஆகிய பகுதிகளில்  உள்ள ஆர்.ஆர்.கன்ஸ்ட்ரக்சன் அலுவலகங்களில் 50க்கும் மேற்பட்ட வருமான  வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். காலை 9 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை  வரை நீடித்தது. இதில் எடப்பாடி பழனிசாமி  ஆட்சிக்காலத்தில் பல்வேறு அரசு ஒப்பந்தப்பணிகள் எடுக்கப்பட்டது தொடர்பான  ஆவணங்கள் மற்றும் அதிகளவிற்கான சொத்துகள் மற்றும் ரொக்க பணப்பரிமாற்றம்  நடந்துள்ளது குறித்தும் ஆவணங்களை கைப்பற்றி சென்றதாக தெரிகிறது.

அதேபோல, திண்டுக்கல்  மாவட்டம், நத்தம் அருகே கோசுகுறிச்சி பகுதியில் தற்காலிக அலுவலகம் அமைத்து நத்தத்திலிருந்து துவரங்குறிச்சி செல்லும் நான்கு வழிச்சாலை பணிகளை மேற்கொண்டு வருகிறது. அப்பகுதியில்தான் வாகனங்கள், ஜேசிபி  இயந்திரங்கள் போன்றவைகளும் நிறுத்தப்பட்டு, இங்குள்ள குடோனில் இருந்து  மூலப்பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு பணிகள் வழங்கப்படுகிறது. அதற்கான  அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று காலை சுமார் 8 மணியளவில் 3  பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.  இச்சோதனை நள்ளிரவு வரை தொடர்ந்தது. அலுவலகத்தில் உள்ள நபர்கள் யாரையும்  வெளியே விடாமலும், அவர்களின் செல்போன்கள் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டும்  சோதனைகள் நடந்தது.

ஒட்டன்சத்திரம் அருகே சின்னகரட்டுப்பட்டி மற்றும்  மார்க்கம்பட்டி அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் நேற்று வருமான வரித்துறையின் சோதனை நடந்தது. மதுரையில்  இருந்து வந்த வருமான வரித்துறையினர் 5 பேர் கொண்ட குழுவினர், நேற்று காலை 8  மணி துவங்கி நேற்று நள்ளிரவு வரை சோதனை நடத்தினர். அதேபோல, கிழக்கு கடற்கரை சாலையில் கல்பாக்கம்  அடுத்த வடபட்டினத்தில் இந்த நிறுவனத்துக்கு சொந்தமாக ஒரு சொகுசு பங்களா உள்ளது. இங்கு வருமான வரித்துறையினர் 5 பேர் கொண்ட குழு திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார்  ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடத்திய சோதனையில் சில முக்கிய ஆவணங்கள்  சிக்கியதாக கூறப்படுகிறது.

மேலும், இதுதொடர்பாக அந்த பண்ணை வீட்டிலிருந்த  ஒரு நபரை வருமான வரித்துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். இந்த  பண்ணை வீடு அமைந்துள்ள பகுதி கிழக்கு கடற்கரை சாலைக்கும், கடற்கரைக்கும்  நடுவே அடர்ந்த மரங்களுக்கு நடுவே மறைவான பகுதியிலும், ஏற்கனவே கூவத்தூரில்  எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த ‘‘கோல்டன் பே” ஓட்டலுக்கு சற்று  தூரத்தில் பின்புறத்திலும் அமைந்துள்ளது. இங்கு இரவு நேரத்தில் மட்டும் விலை உயர்ந்த கார்களில் சிலர் வந்து தங்கி அதிகாலை சென்று விடுவார்கள் என அப்பகுதியினர் தெரிவித்தனர். இந்த வீடுகளில் நடந்த சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியதாக கூறப்படுகிறது. ஏராளமான ஆவணங்களையும் அள்ளிச் சென்றுள்ளனர். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் செய்த செலவு குறித்த ஆவணங்கள் அடங்கிய டைரியும் சிக்கியதாக கூறப்படுகிறது.

2021 தேர்தல் செலவை கவனித்த நிறுவனம்
சேலம், கோவையின் பாலப்பணிகள் முழுமையாக ஆர்.ஆர்.இன்ப்ரா கன்ஸ்ட்ரக்சனுக்கு வழங்கப்பட்டுள்ளதால், 2021ம் ஆண்டு தேர்தல் செலவு முழுமையாக இந்த நிறுவனமே செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக சேலத்தில் அலுவலகம் அமைத்து பணிகளை செய்துள்ளனர். இவர்கள்தான் தமிழகம் முழுவதும் பணத்தை கொண்டு சென்று விநியோகம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இவர்களிடம் இருந்து ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளன. ஏற்கனவே, எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரும் கான்ட்ராக்டருமான செய்யாத்துரை வீடு, அலுவலகத்தில் சோதனை நடந்தது. தற்போது முருகப்பெருமாள் வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசு எடப்பாடி பழனிசாமியை சுற்றி வளைத்து தாக்குதலை தொடங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதயகுமார் நண்பர் வீட்டில் ரூ.27 கோடி சிக்கியது
மதுரையை அடுத்த அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் பால்சாமி மகன்கள் அழகர், முருகன், ஜெயக்குமார், சரவணக்குமார், செந்தில்குமார். இவர்கள் கிளாட்வே, ஜெயபாரத், அன்னை பாரத், கிரீன்சிட்டி ஆகிய 4 கட்டுமான நிறுவனங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றனர். இந்நிறுவனங்கள் முறையாக வருமானவரி செலுத்தவில்லை என்றும், வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளனர் என்றும் 50க்கும் மேற்பட்ட புகார்கள் வருமான வரித்துறைக்கு வந்தன.

இதனையடுத்து, இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான அவனியாபுரம், வில்லாபுரம், சிலைமான் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், அலுவலகங்களில் நேற்று காலையில் இருந்து மாலை வரை வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் ரூ.27 கோடி பணம் சிக்கி உள்ளது. முக்கிய ஆவணங்களும் கிடைத்தன. இந்த நிறுவனம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு நெருக்கமான நிறுவனம் என்று கூறப்படுகிறது.

Tags : Edapadi ,I. TD , Edappadi's main surrogate, contractor, IT check
× RELATED ஈவு இரக்கம் இல்லமல் ஒரு ஆட்சி எப்படி...