ஊட்டி : ஊட்டி அருகே பைக்காரா அணை பகுதி, நேற்று மழையின்றி ரம்மியமான சூழலில் காட்சியளித்தது. இதனால், சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி-கூடலூர் சாலையில் சுமார் 20 கி.மீ., தொலைவில் பைக்காரா அணை அமைந்துள்ளது. இந்த அணை நீலகிரி வன கோட்டத்தில் அமைந்துள்ளது. இந்த அணை நீரை கொண்டு சிங்காரா மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. பைக்காரா அணையில் சுற்றுலா துறை சார்பில் படகு இல்லம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 20க்கும் மேற்பட்ட மோட்டார் படகுகளும், 7 ஸ்பீட் போட் எனப்படும் சாகச படகுகளும் உள்ளன. இங்கு வர கூடிய சுற்றுலா பயணிகள் தண்ணீரை கிழித்து கொண்டு செல்லும் ஸ்பீட் படகுகளில் பயணிக்க பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர்.
பைக்காரா அணையில் படகு சவாரி செய்யும் போது வனங்களில் இருந்து வெளியேறி கரையோரத்துக்கு வரும் மான்கள், புலிகள் உள்ளிட்ட வன விலங்குகளையும் பார்த்து ரசிக்கின்றனர்.
கடந்த மாத இறுதி வரை பைக்காரா அணையின் நீர்மட்டம் சரிந்து காணப்பட்டது. இந்நிலையில் 15 நாட்களுக்கும் மேலாக பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. குறிப்பாக, பைக்காரா படகு இல்லத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை கடுமையாக சரிந்தது.
அதேசமயத்தில் மழை காரணமாக பைக்காரா அணை நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. இந்நிலையில் நேற்று ஊட்டி நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்த நிலையிலும், பைக்காரா பகுதியில் மழையின்றி ரம்மியமான சூழல் நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் பைக்காராவிற்கு படையெடுத்தனர். படகு இல்லத்தில் இருந்து மோட்டார் படகுகளில் சவாரி செய்து இதமான காலநிலை மற்றும் இயற்கையை பார்த்து ரசித்தனர். படகு இல்லத்திற்கு வந்திருந்த பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தண்ணீரை கிழித்து கொண்டு செல்லும் ஸ்பீட் போட்டில் சவாரி செய்து மகிழ்ந்தனர். இதேபோல் அருகில் உள்ள பைக்காரா அருவியிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைேமாதியது.