பண்ருட்டி : பண்ருட்டி அருகே கணவன், மனைவி தகராறின்போது அவர்களை சமாதானப்படுத்திய 14 வயது மகனின் தலையில் அம்மிக்கல்லைப்போட்டு தந்தை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அங்குசெட்டிப்பாளையம் இருளர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் பக்கிரி மகன் முருகன் (38). இவரும், இவரது மனைவி சுமதியும் சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்களுக்கு அர்ஜீனன் (14) என்ற மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். அர்ஜீனன் அங்குசெட்டிப்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் நள்ளிரவு மது போதையில் இருந்த முருகன் மனைவி சுமதியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மகன் அர்ச்ஜீனன், தந்தையிடம் ஏன் குடித்துவிட்டு வந்து அம்மாவிடம் சண்டை போடுகிறீர்கள். எப்படி தூங்குவது என்று கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த முருகன், அர்ஜூனனை அடித்து கீழே தள்ளி அருகில் கிடந்த அம்மிக்கல்லை தூக்கி தலையில் போட்டுள்ளார். இதில் சிறுவன் அர்ஜுனன் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதனை அறிந்த முருகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற புதுப்பேட்டை போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேதே பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது தொடர்பாக முருகன் மீது வழக்குப்பதிந்த புதுப்பேட்டை போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பெற்ற மகனை தந்தையே அம்மிக்கல்லை தலையில் போட்டு கொலை செய்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகனை கொன்றது ஏன்? திடுக் வாக்குமூலம்
கைது செய்யப்பட்ட முருகன் போலீசாரிடம் அளித்த வாக்கு மூலத்தில் கூறுகையில், செங்கல் சூளையில் நான் வேலை செய்து வருகிறேன். மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்று இருந்தேன். அப்போது மேலும் குடிக்க பணம் கேட்கும்போது தகராறு எழுந்தது. அப்போது அருகில் இருந்த அம்மி கல்லை எடுத்து மனைவி மேல் போடுவதாக மிரட்டினேன். பின்னர் கல்லை கீழே போடும்போது மகன் அங்கு இருப்பது தெரியாமல் அவன் மீது விழுந்தது. இதில் மகன் இறந்தது எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தப்பி ஓட முயன்றபோது போலீசார் என்னை கைது செய்தார்கள். இவ்வாறு வாக்குமூலத்தில் போலீசாரிடம் கூறினார்.