×

தஞ்சாவூர் அருகே ஆற்று வெள்ளத்தில் 3 மீனவர்கள் மாயம்-தீயணைப்பு வீரர்கள் தேடும் பணி தீவிரம்

திருவிடைமருதூர் : தஞ்சாவூர் அருகே ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 மீனவர்களை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்த பந்தநல்லூர் மதகு சாலையை சேர்ந்தவர்கள் கலியமூர்த்தி மகன் ஆகாஷ்(24), சேகர் மகன் மஜ்னு (எ) மனோஜ்(22), கார்மேகம் மகன் அப்பு (எ) ராஜேஷ்(22), வெங்கட்ராமன் மகன் கொளஞ்சிநாதன்(34). இவர்கள் 4 பேரும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 11.30 மணியளவில் மதகு சாலை கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் நின்று கொண்டு 4 பேரும் வலைகளை வீசி மீன் பிடித்து கொண்டிருந்தனர். நள்ளிரவு 1 மணியளவில் ஆற்றில் அதிகளவில் தண்ணீர் சென்றதால் காரையோரம் நின்று மீன் பிடித்து கொண்டிருந்த 4பேரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

அப்போது மீன் பிடிப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சிலர், விரைந்து செயல்பட்டு கொளஞ்சிநாதனை மட்டும் மீட்டு கரை சேர்த்தனர். மீதமுள்ள 3 பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட தகவல் பரவியதால் மதகு சாலை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அந்த பகுதியில் குவிந்தனர். தகவல் அறிந்த பந்தநல்லூர் போலீசார், திருவிடைமருதூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். நள்ளிரவு நேரம் என்பதாலும், ஆற்றில் அதிகளவில் தண்ணீர் செல்வதாலும் மீனவர்களை தேடும் பணியில் சிரமம் ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை திருவிடைமருதூர் தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் மற்றும் போலீசார் உதவியுடன் படகுமூலம் கொள்ளிடம் ஆறு முழுவதும் 3 பேரையும் தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். தஞ்சாவூர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ், எஸ்.பி ரவளிப்ரியா காந்தபுனானி, கும்பகோணம் ஆர்டிஓ லதா, திருவிடைமருதுார் தாசில்தார் சந்தனவேல், டிஎஸ்பி வெற்றிவேந்தன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதில் உயிருடன் மீட்கப்பட்ட கொளஞ்சிநாதன் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்ததால் அவரால் பேச முடியாத நிலையில் உள்ளார். மருத்துவ குழுவினர் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். வெள்ளத்தில் 3 பேர் அடித்து செல்லப்பட்ட சம்பவம் திருப்பனந்தாள், பந்தநல்லுார் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Thanjavur , Thiruvidaimarudur: Firemen are searching for 3 fishermen who were swept away by the river near Thanjavur. Thanjavur
× RELATED வாக்கு பதிவான இயந்திரங்கள் பூட்டி...