சென்னை: தமிழ் திரைப்பட இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு, சமீபத்தில் ராஜ்யசபா உறுப்பினர் நியமனப் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இளையராஜா இன்னும் பதவி ஏற்கவில்லை. இந்நிலையில், கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் இசை சம்பந்தமாக நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்றிருந்தார். அந்நிகழ்ச்சியை முடித்துவிட்டு, அமெரிக்கா வில் இருந்து துபாய் வழியாக, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் நேற்று காலை 8.40 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தார்.
காலை 9:30 மணியளவில் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த இளையராஜாவுக்கு சென்னை விமான நிலையத்தில் பாஜவினர் மற்றும் திரைப்படத்துறையினர், ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர்.பாஜ எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், ஆர்.எம்.காந்தி, சி.கே.சரஸ்வதி மற்றும் திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தினர், இயக்குனர்கள் பாரதிராஜா, கங்கை அமரன், ஆர்.கே.செல்வமணி உள்பட ஏராளமானவர்கள், இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வரவேற்பை ஏற்றுக்கொண்ட இளையராஜா, பிறகு காரில் ஏறி தன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.