×

பெரியபாளையம் அம்பேத்கர் நகர் பகுதியில் குண்டும், குழியுமாக மாறிய தார்சாலை: அமைத்து 3 ஆண்டுகளில் அவலம்

பெரியபாளையம்: பெரியபாளையம் அம்பேத்கர் நகர் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட தார் சாலை தற்போது குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர்.எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில் சுமார் 650 குடும்பங்களைச் சேர்ந்த 2600 மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

இந்நிலையில், இப்பகுதியில் கடந்த 2018-19ம் ஆண்டு நிதியாண்டில் ஒன்றிய நிதியில் சுமார் 500 மீட்டர் நிலத்திற்குரூ.7 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கப்பட்டது. சாலை அமைத்து 3 ஆண்டுகளே ஆன நிலையில் தற்போது அந்த சாலை மக்கள் பயன்படுத்து முடியாத நிலையில் குண்டும், குழியுமாக மாறியுள்ளது. மேலும் ஜல்லி கற்கள் வெளியே தெரிந்தபடி மோசமாகியுள்ளது. இதனால் இந்த சாலையில் பொதுமக்கள் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்த சிலர் சாலையை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியதால் சாலை குறுகிய அளவில் உள்ளது.

மேலும் இப்பகுதியில் வாழும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், படித்த இளைஞர்கள் கல்லூரிகளுக்கும் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும், மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகளும் இந்த  மோசமான சாலை கடந்து தான் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் சாலையில் ஏற்பட்டுள்ள  பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் சாலையை கடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இந்த தார் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை
பொதுமக்கள் கூறுகையில், `அம்பேத்கர் நகர் பகுதியில் போடப்பட்டுள்ள சாலையானது மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது.  இதனால் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் முதியோர்கள் மற்றும் குழந்தைகள் பலமுறை விழுந்து படுகாயமடைகின்றனர்.

இதுகுறித்து எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும்  மாவட்ட நிர்வாகத்திற்கும் பலமுறை கோரிக்கை மனு அளித்தும்,  கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திலும் பலமுறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அம்பேத்கர் நகர் பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி அளவீடு செய்து புதிய சாலை அமைத்து தர வேண்டும்’ என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Dharsala ,Periyapalayam Ambedkar Nagar , Thar Road, Periyar Nagar,
× RELATED சாலைப் பணிக்கு பூமி பூஜை