புதுடெல்லி: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர் ரிஸ்வான் அக்தர்(24). இவர் கடந்த 16ம் தேதி நள்ளிரவு 11 மணியளவில் ராஜஸ்தானில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையை கடந்து இந்திய பகுதிக்குள் நுழைந்தார். பாதுகாப்பு பணியில் இருந்த எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் அவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில் முதலில் அஜ்மீர் தர்காவை பார்ப்பதற்காக வந்ததாக கூறிய அந்த வாலிபர், அதன் பின்னர் முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து கூறிய பாஜ முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவை கொலை செய்வதற்காக வந்ததாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.