சென்னை: மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எந்தவித ஆவணங்களும் இன்றி முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் இணையலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் முதன்மை செயலாளர் செந்தில்குமார் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: அனைவருக்கும் சுகாதாரத்தை உறுதி செய்யும் நோக்கில் முதல்வரின் விரிவாக மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் ஆண்டு வருமானம் ரூ.72,000ல் இருந்து ரூ.1,20,00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை 2022ம் ஆண்டு முதல் 2027ம் ஆண்டு வரை செயல்படுத்துவதற்கு ‘யுனைடெட் இந்தியா இன்ஸ்சூரன்ஸ்’ நிறுவத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்டத்தின் திட்ட இயக்குநரின் கடிதத்தில், ‘கீழ்பாக்கத்தில் அமைந்துள்ள மனநல காப்பகத்தில் பல வருடங்களாக இருக்கும் 311 ஆண்கள் மற்றும் 209 பெண்கள் என்று மொத்தம் 500 பேருக்கு எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் இருந்த காரணத்தால் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைய முடியாமல் உள்ளது.
ரேஷன் கார்டு உள்ள தமிழகத்தில் வசிப்பவர்களும், ஆண்டு வருமானம் ரூ.1.2 லட்சத்துக்கும் குறைவாக உள்ளவர்களும் முதல்வரின் விரிவாக மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு பெறத் தகுதியுடையவர்கள். இத்திட்டத்தின் கீழ் பலன்களைப் பெறுவதற்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் வருமானச் சான்று ஆகியவற்றுடன் குடும்பத் தலைவரின் சுய அறிக்கையுடன் சமர்ப்பித்தால் போதுமானது.
மனநலக் காப்பகத்தில் வசிப்பவர்களுக்கு இத்தகைய சான்றிதழ்கள் தேவையில்லை. பெரும்பாலான நோயாளிகள் அறியப்படாதவர்கள், சமூக ஆதரவு இல்லாமல் அல்லது வரவேற்பு ஆர்டர்கள் மூலம் அனுமதிக்கப்பட்டவர்கள். அடையாளச் சான்று இல்லாததால் அவர்களது குடும்ப அட்டைகளில் இருந்து அவர்களின் பெயர்களை நீக்க எந்த வழியும் இல்லை. யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம், ரேஷன் கார்டு மற்றும் வருமானச் சான்றிதழ்கள் இல்லாத நிலையில் மனநலக் காப்பீட்டு நிறுவனத்தில் சேர்வதை ஏற்றுக்கொண்டது.