×

தொலைந்துபோன வைபை ஏடிஎம் கார்டை பயன்படுத்தி துணிக்கடை, ஓட்டல், டாஸ்மாக் கடையில் பரிவர்த்தனை செய்து 83 ஆயிரம் திருட்டு: பாடியில் வாலிபர் கைது

அம்பத்தூர் : தொலைந்துபோன வைபை ஏடிஎம் கார்டை  பயன்படுத்தி  துணிக்கடை, ஓட்டல், டாஸ்மாக் கடையில்  பரிவர்த்தனை செய்து ₹83 ஆயிரம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடமிருந்து  4000  ரூபாய் ரொக்கம், பைக்,  ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை அம்பத்தூர் பாடி பஜனை கோயில் பகுதியை சேர்ந்தவர் சரவணன். கொளத்தூரில் டீக்கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 14ம் தேதி இரவு பகுதியில் உள்ள  தனியார் வங்கி ஏடிஎம்மில்,  தனது வைபை ஏடிஎம் கார்டு மூலம் 10,000 ரூபாய் எடுத்துள்ளார். இந்நிலையில் மறுநாள் மதியம் 1.30 மணி அளவில் சரவணனின் செல்போனுக்கு  வந்த குறுஞ்செய்தியை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.  அதில், தனது வங்கி கணக்கில் இருந்து பாடியில் உள்ள பிரபல துணிக்கடை, ஓட்டல், மதுபான கடையில் வைபை ஏடிஎம் கார்டு மூலம் ₹3500 பரிவர்த்தனை செய்யப்பட்டது தெரியவந்தது. அதன்பிறகுதான் தனது ஏடிஎம் கார்டு தொலைந்துபோனது தெரியவந்தது. இதையடுத்து வங்கியின் உதவி மையத்துக்கு தொடர்பு கொண்டு  தனது ஏடிஎம் கார்டை பிளாக் செய்யும்படி சரவணன் கூறியுள்ளார்.

இதுகுறித்து கொரட்டூர் போலீசில்  சரவணன் புகார் செய்தார். அதன்படி இன்ஸ்பெக்டர்  கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வைபை ஏடிஎம் கார்டு இருக்கும் இடம் தெரிந்து பாடி பகுதிக்கு போலீசார் விரைந்தனர்.  அங்கு சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த  வாலிபரை பிடித்து விசாரித்தபோது,  மண்ணூர்பேட்டை பகுதியை சேர்ந்த சுரேஷ் (31) என்பதும்,  தொலைந்துபோன வைபை ஏடிஎம் கார்டு மூலம் பாடியில் உள்ள பிரபல துணிக்கடை, ஓட்டல், மதுபான கடைகளில் பரிவர்த்தனை செய்து  பணம் திருடியதும் தெரியவந்தது. இதுபோல் ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் ஜெயலட்சுமி நகர் பகுதியை சேர்ந்த தீபா  என்பவரின்  தொலைந்துபோன வைபை ஏடிஎம் கார்டை பயன்படுத்தி 79  ஆயிரம் ரூபாய்  என 82,500  ரூபாய் பரிவர்த்தனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 4 ஆயிரம் ரொக்கம், ஏடிஎம் கார்டுகள் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட சுரேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர்.  இந்த சம்பவம்  பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags : Walliber ,Badi ,tasmak , 83,000 stolen by using lost Wi-Fi ATM card to make transactions in clothes shop, hotel, Tasmac shop: Youth arrested in Badi
× RELATED ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலை விபத்தில் இளம்பெண் பலி