மதுரை: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்து யூ டியூபர் சவுக்கு சங்கர் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மதுரையை சேர்ந்த யூ டியூபர் மாரிதாஸ், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. இதில், இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், யூ டியூபர் சவுக்கு சங்கர் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவு செய்திருந்தார்.
அதில், மாரிதாஸ் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்து ஒரு அவதூறு கருத்தை பதிவிட்டிருந்தார். அப்பதிவில், “அய்யா எதுவா இருந்தாலும் என் கிட்டயே கேக்கலாம். கோர்ட்டில் பேச வேண்டாம்” என்று பதிவிட்டிருந்தார். இதனை காரணம் காட்டிய நீதிபதி, தன் மீது யூ டியூபர் சவுக்கு சங்கர் அவதூறு கருத்து பரப்பியுள்ளார். எனவே, இவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்யக்கோரி மதுரைக்கிளை பதிவாளருக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், பரிந்துரை கடிதத்தையும், உத்தரவையும் பிறப்பித்தார். இதையடுத்து, விரைவில், யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழக்கு விசாரணைக்கு வரும் என தெரிகிறது.