தஞ்சாவூர் : தங்களின் பூர்வீக சொத்தை ஆக்கிரமித்துள்ள தனியாரிடம் இருந்து அதனை மீட்டு தர வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் மனு அளிக்க வந்த தாய், மகளால் பரபரப்பு ஏற்பட்டது. கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் சோதனை செய்த பிறகே மனு அளிக்க உள்ளே அனுமதித்தனர்.தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் பொது மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மனு அளிப்பவர்கள் பலர் மண்ணெண்ணெய் கேனுடன் வருவதால், போலீசார் மனு அளிக்க வந்த அனைவரையும் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் சோதனை செய்த பிறகே மனு அளிக்க உள்ளே அனுமதித்தனர்.
இந்நிலையில், பட்டுக்கோட்டை லெட்சதோப்பு பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மனைவி வசந்தி, மகள் சத்யா இருவரும் மனு அளிக்க வந்தனர். அப்போது அவர்கள் கொண்டு வந்த பையில் மண்ணெண்ணெய் கேன் இருப்பதை பார்த்த போலீசார் அதனை வாசலிலேயே பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி மனு அளிக்க அனுப்பி வைத்தனர். பின்னர் தாய், மகள் இருவரும் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: கடந்த 2009ம் ஆண்டு பூர்வீகமாக இருந்த சொத்துக்களை விற்க எனது கணவர் பன்னீர்செல்வம் தீர்மானித்தார். இதையடுத்து பட்டுக்கோட்டையை சேர்ந்த ஒருவருக்கு நம்பிக்கையின் பேரில் “பொது அதிகார ஆவணம்” எழுதி கொடுத்திருந்தார்.
இதை தொடர்ந்து அந்நபர் எங்களின் சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்து விட்டார். இதனால் எனது கணவர் பொது அதிகார ஆவணத்தை ரத்து செய்துவிட்டார். இதற்கிடையில் எனது கணவர் பன்னீர்செல்வம் இறந்து விட்டார். அதிகார ஆவணம் ரத்து செய்த விவரத்தை மறைத்து அந்த நபர் எங்களின் சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளார். எங்கள் சொத்துக்களை மீட்டுதர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.