ஆலந்தூர்: ஆதம்பாக்கம் பாலாஜி நகர் 4வது தெருவில் நேற்று முன்தினம் இரவு ஒரு ஒப்பந்ததாரர், பொக்லைன் இயந்திரம் கொண்டு மிகப்பெரிய அளவில் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டார். இதுபற்றி பொதுமக்கள் கேட்டபோது, முறையாக பதிலளிக்காமல், பள்ளத்தை தோண்டி, அதில் ஒரு மின் கம்பத்தையும் சாய்த்து வைத்துவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில், நேற்று காலை ஆலந்தூர் மண்டல அதிகாரிகளை தொடர்பு கொண்டு, எதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது, என்று கேட்டபோது அங்கு எந்தப் பணிக்கும் டெண்டர் விடவில்லை என்று கூறியுள்ளனர்.
இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள், ஆலந்தூர் மண்டல எல்லையை ஒட்டியுள்ள அடையாறு 13வது மண்டல அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, மேற்கு வேளச்சேரிக்கு உட்பட்ட பாலாஜி நகர் 4வது தெருவில் குழாய் பணிக்காக தோண்டப்பட வேண்டிய பள்ளத்தினை தவறுதலாக ஆதம்பாக்கம் பாலாஜி நகரில் தோண்டியது தெரியவந்தது. விபத்து ஏற்படும் முன், மணலை முடி தருவதாக ஒப்பந்ததாரர் உறுதி கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.