தர்மபுரி: தர்மபுரி அருகே சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்று அடுத்தடுத்து திருமணம் செய்து கொண்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அடுத்த உப்பாரஹள்ளியைச் சேர்ந்த 17 வயது சிறுமி 10ம் வகுப்பு முடித்துவிட்டு மேற்கொண்டு படிக்காமல் வீட்டில் இருந்து வந்தார். சிறுமியின் தந்தை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். எனவே தாயாருடன் வசித்து வந்தார். கடந்த 2020ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் மொட்டையன் மகன் விஜய் (25) என்பவர் சிறுமியின் தாயிடம் சென்று பெண் கேட்டுள்ளார். அப்போது அவர் தனது மகளுக்கு 16 வயதுதான் ஆகிறது. 18 வயது முடிந்ததும் பேசிக்கொள்ளலாம் என கூறி மறுத்துள்ளார்.
இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அவரை அழைத்துச்சென்று விஜய் திருமணம் செய்துள்ளார். பின்னர் திருப்பூரில் தங்கி இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் அவர்கள் சொந்த ஊருக்கு வந்து விட்டனர். விஜய் கூலி வேலைக்கு சென்று வந்த நிலையில் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனிடையே சிறுமியின் தாயுடன் கூலிவேலை செய்துவந்த கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியைச் சேர்ந்த பூபதி (23) என்பவருடன் சிறுமிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பூபதியுடன் சிறுமி அடிக்கடி பேசி வந்துள்ளார்.
இதனை அறிந்த விஜய் சிறுமியை கண்டித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 15ம் தேதி உப்பாரஹள்ளிக்கு வந்த பூபதி, சிறுமியை ஓசூருக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்குள்ள ஒரு முருகன் கோயிலில் வைத்து சிறுமிக்கு, விஜய் கட்டியிருந்த தாலியை கழற்றி உண்டியலில் போட்டு விட்டு பூபதி புதிதாக தாலி கட்டி உள்ளார். பின்னர் இருவரும் ஓசூரில் தங்கியிருந்தனர். இதையறிந்த விஜய் தனது மனைவியை கடத்தி பூபதி திருமணம் செய்ததாக மாரண்டஹள்ளி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓசூரில் தங்கியிருந்த சிறுமி மற்றும் பூபதியை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போதுதான் 18 வயதுக்கு முன்பாக 2 பேர் சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியிடம் புகாரை பெற்ற போலீசார், விஜய் மற்றும் பூபதியை குழந்தை திருமணம் மற்றும் போக்சோ பிரிவில் கைது செய்தனர்.