காலே: பாகிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்டில், இலங்கை அணி வலுவான முன்னிலை பெற்றுள்ளது. காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 222 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சண்டிமால் 76 ரன் விளாசினார்.அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 218 ரன்னுக்கு சுருண்டது (90.5 ஓவர்). சக வீரர்கள் பெரிதாக ஒத்துழைக்காவிட்டாலும், அபாரமாக விளையாடிய கேப்டன் பாபர் ஆஸம் சதம் விளாசினார் (119 ரன், 244 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்). இலங்கை பந்துவீச்சில் பிரபாத் 5 விக்கெட் வீழ்த்தினார். 4 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை, 2ம் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 36 ரன் எடுத்திருந்தது. ஒஷதா 17 ரன், ரஜிதா 3 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர்.
ரஜிதா 7, ஒஷதா 64 ரன், மேத்யூஸ் 9 ரன் எடுத்து வெளியேற, குசால் மெண்டிஸ் 76 ரன் விளாசி யாசிர் ஷா பந்துவீச்சில் கிளீன் போல்டானார். ஒரு முனையில் சண்டிமால் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்த... தனஞ்ஜெயா 20, டிக்வெல்லா 12, ரமேஷ் 22, தீக்ஷனா 11 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். 3ம் நாள் முடிவில் இலங்கை அணி 2வது இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 329 ரன் எடுத்துள்ளது (96 ஓவர்). சண்டிமால் 86 ரன், பிரபாத் 4 ரன்னுடன் களத்தில் உள்ளனர். பாக். பந்துவீச்சில் நவாஸ் 5, யாசிர் 3, ஹசன் அலி 1 விக்கெட் வீழ்த்தினர். கை வசம் 1 விக்கெட் இருக்க, இலங்கை அணி 333 ரன் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இன்று 4ம் நாள் ஆட்டம் நடக்கிறது.