புதுடெல்லி: தன்னை பற்றி நீதிபதி தெரிவித்த கருத்துகளை வாபஸ் பெறக்கோரி முன்னாள் பாஜ செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். பாஜ செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா நபிகள் நாயகம் குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து இருந்தார். இதையடுத்து அவரை கட்சியில் இருந்து பாஜ சஸ்பெண்ட் செய்தது. இந்தச் சூழலில் பல மாநிலங்களில் நுபுர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எல்லா வழக்குகளையும் விசாரணைக்காக டெல்லிக்கு மாற்றக் கோரிய நுபுர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது, உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் சர்மாவுக்கு எதிராக கடுமையான கருத்துகளைத் தெரிவித்தார். மேலும், அவரது மனுவை ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். இந்நிலையில், ‘நீதிபதியின் விமர்சனத்துக்கு பின்னர் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் வருகிறது. எனவே நீதிபதி தெரிவித்த கருத்துகளை வாபஸ் பெற வேண்டும். மேலும் அனைத்து வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க வேண்டும்’ எனக்கோரி நுபுர்சர்மா உச்சநீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்துள்ளார்.