கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலவரத்தை தூண்டியவர்கள் யார் என்பதை கண்டறிய குழு அமைக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். மாணவி மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி சூறையாடப்பட்டு வன்முறை ஏற்பட்டது. இந்த விவரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கலவரம் நடத்த இடத்தை அமைச்சர்கள் அன்பில் மகேஷ், எ.வ.வேலு, சி.வி.கணேசன் ஆகியோர் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்பாது பெற்றோர்கள் தரப்பில் பள்ளியை விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு; மாணவி மரணமடைந்த மறுநாளே அமைச்சர் சி.வி.சண்முகம் தாயாரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக தயார் செல்வி தெரிவித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வன்முறையை கட்டவிழ்த்து விட்டபோதும் மாணவர்கள், பெற்றோருக்களை காவல்துறையினர் பாதுகாத்தனர். வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் மாணவர்கள் பெயரில் போராட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட தவறான தகவலால் தான் வன்முறை ஏற்பட்டது.
பள்ளி பேருந்து உட்பட மொத்தம் 67 வாகனங்களுக்கு சமூக விரோதிகள் தீ வைத்தனர். மாணவர்களின் சான்றிதழ்கள் உள்பட ஏராளமான பொருட்களும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் என்ற போர்வையில் சில விஷமிகள் ஊடுருவி அரசுக்கு கேட்ட பெயர் ஏற்படுத்தவே வன்முறை நிகழ்த்தினர். 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த போதும் காவல்துறை தனது பலத்தை பிரயோகிக்காமல் சிறப்பாக செயல்பட்டது. பள்ளியில் விடுதியில் இருந்த மாணவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதே காவல்துறையின் நோக்கமாக இருந்தது. ஜனநாயக முறையில் நீதி கேட்டு போராட அனைவருக்கும் உரிமை உள்ளது. சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட தவறான தகவலால் தான் வன்முறை ஏற்பட்டது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து, கூடி தவறான முடிவை எடுத்து விட்டனர். தவறு யார் செய்தாலும், இந்த அரசு அதை அனுமதிக்காது. பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட வேண்டிய அவசியமில்லை. இவ்வளவு பேர் திரள்வார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை. கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக இதுவரை 22 சிறார்கள் உள்ளிட்ட 278 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாளை மாலை பெற்றோர் முன்னிலையில் மருத்துவ நிபுணர்களை கொண்டு மாணவியின் உடல் உடற்கூறாய்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இவ்வாறு கூறினார்.