×

மது அருந்தியபோது சைடிஷ் வாங்குவதில் தகராறு வெல்டர் வெட்டி கொலை: நண்பர்கள் வெறிச்செயல்: திருவள்ளூர் அருகே பரபரப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே மது அருந்தியபோது சைடிஷ் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் வெல்டரை வெட்டிக்கொலை செய்த நண்பர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொட்டிக்கலை, அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் வேலு(30). வெல்டர். இவர் நேற்று தனது வீட்டில் இருந்தபோது மதியம் 2 மணியளவில் இவரது செல்போனுக்கு திடீரென  வந்த அழைப்பையடுத்து வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து தனது நண்பர்களான செல்வா(26), கோகுல், ஸ்டாலின் உள்ளிட்ட 4 பேருடன் செவ்வாப்பேட்டை அடுத்த சிறுகடல் பகுதியில் டாஸ்மாக் கடைக்கு சென்றனர். பின்னர் நண்பர்களுடன் அதே பகுதியில் மது அருந்துவதற்காக சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், டாஸ்மாக் கடைக்கு பின்புறம் கொள்ளமேட்டில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தபோது சைடிஷ் வாங்குவதில் நண்பர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது மதுபோதையில் தகராறு முற்றியதால் அவர்களுக்கிடையே வாய் தகராறு மோதலாக மாறியுள்ளது. அப்போது செல்வா தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வேலுவின் கழுத்து வயிறு, கை, கால் என சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே வேலு ரத்தவௌ்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக  பலியானார்.

தகவலறிந்த ஆவடி சரக காவல் உதவி ஆணையர் முத்துப்பாண்டி, இன்ஸ்பெக்டர் டில்லிபாபு, சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன்,  இமானுவேல் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வேலுவின் சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் புகாரின்பேரில் செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் வில்லிவாக்கத்தில் வசித்து வந்த வேலு மீது கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொலை வழக்கு, 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கு ஆகியவை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதனால் தொட்டிக்கலை பகுதியில் தங்கி வெல்டிங் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மது அருந்தியபோது சைடிஷ் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் வெல்
டரை அவரது நண்பர்களே வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

*திட்டமிட்ட சதியா?
தொட்டிக்கலை கிராமத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த வேலுவை செல்போனில் பேசி வரவழைத்து யார் என்றும், டாஸ்மாக் கடையில் சைட் டிஷ் வாங்குவதில் வேண்டுமென்றே தகராறு செய்து கொலை செய்ததால், இது சைடிஷ்க்காக நடந்த கொலையா அல்லது வில்லிவாக்கத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான வேலுவை தீர்த்துக்கட்ட யாரேனும் சதி திட்டம் போட்டு இந்த கொலை நடந்ததா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Thiruvallur , Welder hacked to death over dispute over buying sidedish while drinking alcohol: friends go berserk: commotion near Tiruvallur
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்