புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மார்கரெட் ஆல்வா அறிவிக்கப்பட்டுள்ளார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ம் தேதியுடன் முடிகிறது. இதையொட்டி, புதிய துணை ஜனாதிபதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 6ம் தேதி நடக்கிறது. இதில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கர் வேட்பாளராக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தலைமையில் அவரது வீட்டில் நேற்று நடந்தது.
கூட்டத்தில், திமுக உள்ளிட்ட 17 எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இதில், காங்கிரஸ் மூத்த தலைவர் மார்கரெட் ஆல்வாவை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. இதை சரத் பவார் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மார்கரெட் ஆல்வா வரும் 19ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இதற்கிடையே தன் கருக்கு பிஜூ ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங் கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித் துள்ளன.
*யார் இந்த மார்கரெட்?
மார்கரெட் ஆல்வா, 1942ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி கர்நாடகாவின் மங்களூருவில் பிறந்தார். சட்டப்படிப்பு பயின்ற மார்கரெட் ஆல்வா,1969ம் ஆண்டு அரசியலில் காலடி எடுத்து வைத்தார். இந்திராகாந்தி தலைமையின் கீழ் பணியாற்றிய ஆல்வா, 1975-1977ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இணை செயலாளராகவும், 1978-1980ம் ஆண்டு கர்நாடக காங்கிரஸ் பொதுச்செயலாளராகவும் பணியாற்றி உள்ளார். 1974-1998ம் ஆண்டு வரை கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, அவை துணைத்தலைவராக பணியாற்றி உள்ளார். 1999ல் உத்தர கன்னடா தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை, நாடாளுமன்ற விவகாரத்துறை உள்ளிட்ட பல துறைகளுக்கு ஒன்றிய அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். கோவா, குஜராத், ராஜஸ்தான், உத்தரகாண்ட் மாநில ஆளுநராகவும் இருந்துள்ளார். இவர் சோனியா காந்திக்கு நெருக்கமானவர்.