×

அதிமுக ஊழல் பெருச்சாளிகளை கோட்டைக்குள் இனிமேல் மக்கள் நுழையவிட மாட்டார்கள்: எடப்பாடிக்கு டி.ஆர்.பாலு எம்பி பதிலடி

சென்னை: ‘‘கோட்டைக்குள் இனிமேல் அதிமுக ஊழல் பெருச்சாளிகளை மக்கள் நுழைய விட மாட்டார்கள்” என்று எடப்பாடிக்கு டி.ஆர்.பாலு எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. நேற்று வெளியிட்ட அறிக்கை: சொந்தக் கட்சிக்குள்ளேயே தனக்கு ஆதரவு தேடி ஊர் ஊராக அலையும் பழனிசாமி, முதல்வராக இருந்த போது கொள்ளையடித்த பணத்தில் கூட்டத்தைத் திரட்டி வைத்துக் கொண்டு, “இந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது, அதிமுக வெற்றி பெறுவதற்கான அச்சாரம் போடப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது” என்று வசனம் பேசியிருக்கிறார். தங்களுடைய கட்சியின் தலைமை அலுவலகத்தின் வாசலிலேயே பழனிசாமி கோஷ்டியும் பன்னீர்செல்வம் கோஷ்டியும் ரணகளமாக்கினர். கட்சி அதிகாரத்திற்கான அவர்களின் தெருச்சண்டையை மறைக்க, திமுக மீது பாய்கிறார் பழனிசாமி.

கொள்ளையடித்த பணத்தைச் செலவு செய்து பெற்ற சொற்ப-அற்ப வெற்றியைக் காட்டி உண்மையை மறைக்க நினைக்கும் பழனிசாமிக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அண்மையில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதே சேலம் மாவட்டத்தில் அதிமுக மண்ணைக் கவ்வியிருப்பதையும் மக்களின் பேராதரவுடன் சேலம் மாவட்டம் திமுக கோட்டையாகத் திகழ்வதையும் மறந்துவிட வேண்டாம். சேலம் மட்டுமல்ல, தமிழ்நாடே இப்போதும் இனி எப்போதும் தி.மு.க. கோட்டைதான். அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களைத்தான் திமுக திறந்து வைத்துக் கொண்டிருக்கிறது என்று வாய்ச்சவடால் அடிக்கும் பழனிசாமி என்ன நிர்வாகத்தை நடத்தினார் என்றே தெரியவில்லை.

முந்தைய ஆட்சிக்காலத்தில் முடிக்காமல் கிடப்பில் போட்ட திட்டங்களை நிறைவேற்றி, மக்களுக்குப் பலன் தரச் செய்வதுதான் திமுக ஆட்சி. உங்களைப் போல மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தை முடக்கிப் போடும் ஆட்சியல்ல. உலகப் புகழ் பெற்ற அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அண்ணாவின் பெயரைக் கட்சியின் லேபிளாக வைத்துக்கொண்டு சிதைக்கின்ற ஆட்சியல்ல எங்கள் திமுக ஆட்சி. திமுக ஆட்சியில் கலைஞரால் உருவாக்கப்பட்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய கோயம்பேடு பேருந்து நிலையத்தையும், சர்வதேச தரத்திலான சென்னை மெட்ரோ ரயில் சேவையையும் அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா தொடங்கி வைத்தாரே அப்போது இந்த பழனிசாமி எங்கே போயிருந்தார்.  

திமுக ஆட்சி என்றால் நாள்தோறும் திட்டங்கள், ஒவ்வொரு நாளும் சாதனைகள் என மக்கள் பேசுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் புலம்பித் தவிக்கிறார் பழனிசாமி. அதிமுக ஆட்சியில் கோட்டைக்குள் நுழைந்து ரெய்டு நடத்தினார்கள். டி.ஜி.பி. அலுவலகத்தில் ரெய்டு நடந்தது. ஒவ்வொரு அமைச்சர் வீட்டிலும் ரெய்டு நடந்தது. இந்த ரெய்டுகளை நடத்திய ஒன்றிய பாஜ அரசை நோக்கி ஒரு வார்த்தைகூட இதுவரை பேச வாய் இல்லாத-முதுகெலும்பு இல்லாத பழனிசாமி, தன் வயிற்றுப் பிழைப்புக்காக திமுகவைத் திட்டுவதை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். கோட்டை பற்றி இனி கனவுகூட காணவேண்டாம். உங்களைப் போன்ற ஊழல் பெருச்சாளிகளை தமிழ்நாட்டு மக்கள் இனிமேல் கோட்டைக்குள் ஒருபோதும் நுழைய விடமாட்டார்கள்.

அண்மையில் ரெய்டுக்குள்ளான கோவை சந்திரசேகர், அருப்புக்கோட்டை செய்யாதுரை ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் 500 கோடி ரூபாய் சொத்துகளுக்கான ஆவணங்கள் சிக்கியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதுபற்றி இதுவரை வாய் திறக்க வக்கில்லாதவர்தான் பழனிசாமி. அதிமுகவை டெல்லி எஜமானர்களிடம் அடமானம் வைத்து, தன்னையும் தான் கொள்ளையடித்த சொத்துகளையும் பாதுகாத்துக் கொள்ளும் பழனிசாமி தலைமையிலான அட்டைக்கத்தி வீரர்கள் உங்கள் வெற்று வீரத்தை திமுகவிடம் காட்டி, தொடர்ந்து வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டாம் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Edapadi ,T. R.R. Balu MB , People won't let corrupt AIADMK goons enter the fort anymore: DR Balu MP responds to Edappadi
× RELATED அதிமுகவை உடைக்கும் முயற்சி ஒருபோதும் நடக்காது: எடப்பாடி பழனிசாமி பேச்சு