கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கருப்பு காய்ச்சலால் 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் கருப்பு காய்ச்சல் முற்றிலும் ஒழிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஒரு வாரத்தில் 65 பேருக்கு இக்காய்ச்சல் மீண்டும் தொற்றியிருப்பது பீதியை ஏற்படுத்தி உள்ளது. டார்ஜிலிங், மால்டா, உத்தர் தினஜ்பூர், தக்ஷின் தினஜ்பூர் மற்றும் கலிம்போங்க் ஆகிய பகுதிகளில் அதிகளவில் பாதிப்புகள் உள்ளன. இக்காய்ச்சல் மேலும் பரவாமல் மாநில சுகாதார அமைச்சகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மாநிலம் முழுவதும் அனைத்து மருத்துவமனைகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. கருப்பு காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக மாவட்ட சுகாதார அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கருப்பு காய்ச்சல் பாதி த்தவர்களுக்கான மருத்துவ செலவை அரசே முழுமையாக ஏற்று சிகிச்சை அளிக்க ஏற்படும் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், சமீபத்தில் பீகார், உத்தரகாண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சில நாட்கள் தங்கியிருந்து திரும்பியவர்களாக உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வங்கதேசத்தில் திரும்பிய சிலருக்கும் கருப்பு காய்ச்சல் தொற்றி உள்ளது. நோய் தொற்று தொடர்பாக தீவிரமாக கண்காணிப்பு பணிகள் நடக்கின்றன.
* கருப்பு காய்ச்சலானது மலேரியாவைப் போன்று ஒருவகை கொசுக்கள் மூலம் பரவுகிறது.
* மணல் கொசுக்கள் எனப்படும் அத்தகைய கொசுக்கள், சாதாரண கொசுக்களை விட அளவில் சிறிதாக இருக்கும்.
* காய்ச்சல், எடை இழப்பு, சோர்வு, தோலில் புண், தடிப்புகள், ரத்தசோகை, கல்லீரல், மண்ணீரல் வீக்கம் போன்றவை இக்காய்ச்சலின் அறிகுறிகளாகும்.
* உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் மரணத்தையும் இக்காய்ச்சல் ஏற்படுத்தும்.