×

மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு குடைச்சல் கொடுத்தவர் பாஜவின் துணை ஜனாதிபதி வேட்பாளர் தன்கர்: நாளை ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு

புதுடெல்லி: பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக, மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கர் அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், நாளை நடைபெறும் ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி காலம் வரும் 24ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து, நாட்டின் 15வது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. ஆளும் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக யஷ்வந்த்  சின்காவும் போட்டியிடுகின்றனர்.

அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடு அனைத்தும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மக்களவை, மாநிலங்களவை எம்பி.க்கள் 776 பேரும், 4,033 எம்எல்ஏ.க்களும் இத்தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 10.86 லட்சம். 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பெறுவர் வெற்றி பெறுவர். தற்போது வரை முர்முவுக்கு 61% வாக்குகள் உறுதியாகி உள்ளது. இந்த  சூழலில், எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த சின்காவுக்கு ஆம் ஆத்மி ஆதரவு அளித்துள்ளது. இத்தேர்தல் முடிவுகள் வரும் 21ம் தேதி அறிவிக்கப்படும்.

இந்நிலையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ம் தேதியுடன் முடிகிறது. புதிய துணை ஜனாதிபதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 6ம் தேதி நடக்கிறது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் தேர்வு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கரை நிறுத்த முடிவு செய்யப்பட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பாஜ சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளதால், எதிர்க்கட்சிகளின் வேட்பாளரும் இன்று அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2019ல் மேற்கு வங்க ஆளுநராக பொறுப்பேற்றதில் இருந்து அம்மாநில முதல்வர் மம்தாவுடன் கடுமையான மோதல் போக்கை தன்கர் கையாண்டு வந்தார். அரசு விவகாரங்களில் தலையிட்டார். இதனால், மம்தாவுக்கும் அவருக்கும் பொதுமேடைகளில் கூட பலமுறை நேரடி மோதல் ஏற்பட்டு இருக்கிறது. இம்மாநிலத்தில் எதிர்க்கட்சியாக உள்ள பாஜ, மம்தாவின் திரிணாமுல் காங்கிரசுடன் கடுமையான மோதல் போக்கை கையாண்டு வருகிறது. அதற்கு துணையாக தன்கரும் இருந்து வருவதால், சர்ச்சைகளுக்கு ஆளானாவர். இவரை ஆளுநர் பதவியில் இருந்து நீக்கும்படி மம்தா தொடர்ந்து குரல் கொடுத்து வந்த நிலையில், பாஜ.வின் துணை ஜனாதிபதி வேட்பாளராக இவர் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

* யார் இந்த தன்கர்?
ஜெக்தீப் தன்கர் 1951ம் ஆண்டு மே 18ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கித்தானா என்ற கிராமத்தில் பிறந்தார். சித்தோர்கர் சைனிக் பள்ளியில் தனது பள்ளி கல்வியை முடித்த பின்னர், ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றார். 1989 முதல் 1991ம் ஆண்டு வரை ஜனதா தள எம்பி.யாக இருந்தார். 1993-98ம் ஆண்டு வரை ராஜஸ்தான் கிஷன்கர்ட் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் செயல்பட்டார். 2019ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

Tags : BJP ,Thankar ,Mamata ,West Bengal , BJP's vice-presidential candidate Thankar is the one who gave Mamata a blow in West Bengal: Voting for the presidential election tomorrow
× RELATED தேர்தல் பிரசாரத்தின்போது...