குன்றத்தூர்: குன்றத்தூரில் பராமரிப்பின்றி இருக்கும் ஆதி திருவாலீஸ்வரர் கோயிலை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் ஆய்வு செய்து, கோயிலை புனரமைக்க எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். குன்றத்தூர் நத்தம் பகுதியில் மிகவும் பழமைவாய்ந்த பாலாம்பிகை உடனுறை ஆதி திருவாலீஸ்வரர் கோயில் உள்ளது. சிதலமடைந்து காணப்படும் இந்த கோயிலை புனரமைத்து பக்தர்கள் வழிபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்களும், பொதுமக்களும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர், அதிகாரிகளுடன் கோயிலுக்கு வருகை தந்தனர். பின்னர், கோயிலை சுற்றிபார்த்து ஆய்வு செய்தனர். இதையடுத்து கோயிலை சீரமைப்பது குறித்தும், கோயிலுக்கு சொந்தமாக எங்கெல்லாம் இடங்கள் உள்ளன என்பது பற்றியும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். திருவாலீஸ்வரர் கோயிலை புனரமைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் அதிகாரிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது, சிதிலமடைந்த திருவாலீஸ்வரர் கோயிலை புனரமைக்கும் பணி விரைவில் நடைபெறும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.