×

தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு : நியாயமான விசாரணை மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..

சென்னை : சின்ன சேலத்தில் தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி,  சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துள்ளதற்கு நியாயமான முறையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்..  

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. ராமலிங்கம்-திருமதி செல்வி தம்பதியரின் மகள் ஸ்ரீமதி என்பவர், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்ததாகவும், அவர், சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்த செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைகிறேன். அன்பு மகளை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இச்செய்தியை அறிந்தவுடன், கழகத்தின் சார்பில், கடலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், புவனகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஆ. அருண்மொழிதேவன் அவர்களை நேரில் சென்று, அக்குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறும்படி கூறினேன். இச்சம்பவம் குறித்து காவல் துறை அனைவரது சந்தேகங்களையும் போக்கும் வகையில், நியாயமான முறையில் விசாரணை மேற்கொண்டு தவறிழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags : Srimathi ,Edappadi Palanisamy , தனியார் ,பள்ளி, மாணவி ,இறப்பு
× RELATED நிலையான கொள்கையே இல்லாத கட்சி பாமக: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்