சென்னை: அரசியல் காரணங்களுக்காகதான் இந்தியா அரசியல் அமைப்பு சட்டத்தில் சமய சார்பற்ற வார்த்தை புகுத்தப்பட்டதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. அண்மை காலமாக தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும், ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையின் பட்டயகணக்காளர் அமைப்பின் 90வது ஆண்டுவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அந்த விழாவில் உரையாற்றிய ரவி இந்தியாவை பன்முகத்தன்மை கொண்ட நிலப்பரப்பாக ஆங்கிலேயர்கள் பதிவு செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். சனாதனம் என்பது அறத்தை மையமாக கொண்டது என்றும், ஆனால் அதற்கு எதிரான சமயசார்பற்ற என்ற வார்த்தை ஆங்கிலேயர்களால் தவறாக வியாகியானம் செய்யப்பட்டு அரசியல் அமைப்பில் சேர்க்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் காரணங்களுக்காகத்தான் 42வது சட்டம் பிரிவு திருத்தம் செய்யப்பட்டு சமயசார்பற்ற என்ற வார்த்தை அரசியல் அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது என்று ஆர்.என்.ரவி குறிப்பிட்டார்.
சனாதனமே நமது அடையாளம் என்று கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதனத்தில் யாரும் முன்னவர்களும் இல்லை யாரும் பின்னவர்களும் இல்லை என்று விளக்கம் அளித்தார். சமய சார்பற்ற என்ற வார்த்தையை கடுமையாக விமர்சித்த ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதனம் என்பது சாராம்சம் என்னவெனில் அனைத்து சமயங்களும் சமம் என்பதாகும் என்றார். ஆங்கிலேயர்களாலேயே நாட்டில் பிரிவினைகள் ஏற்பட்டன என்று மறைமுகமாக குறிப்பிட்ட ரவி 1951ம் ஆண்டுக்கு பிறகு தான் அதிக சாதிகள் உருவாகின என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆளுநரின் இந்த பேச்சுகள் பல்வேறு விமர்சனங்களை கிளப்பி வருகின்றன.