×

அதிமுகவில் சர்வாதிகாரிபோல எடப்பாடி செயல்படுகிறாரா?...முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில்

சென்னை: அதிமுகவில் சர்வாதிகாரிபோல எடப்பாடி செயல்படுகிறாரா என்ற கேள்விக்கு ஜெயக்குமார் பதில் அளித்தார்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் செமஸ்ட் கேள்வியில்  நான்கு சாதிகளை குறிப்பிட்டு இதில் எந்த சாதி தாழ்ந்த சாதி என்று கேட்டுள்ளார்கள். ஒரு கேள்வி தாளில் சாதியை குறிப்பிட்டு, அதுவும் ஒடுக்கப்பட்ட மக்களாக இருக்கின்றவர்களை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த கேள்விகளை எழுப்பியுள்ளனர். வளர்ந்த இந்த சமுதாயத்தில் இதுபோன்ற கேள்வியை ஏற்றுக்கொள்ள முடியாது. இது எல்லோரின் கண்டனத்துக்குரிய செயலாகத்தான் இருக்க முடியும். எதிர்காலத்தில் இதுபோன்ற  நிகழ்வுகள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

எடப்பாடி பலரை கட்சியை விட்டு நீக்குகிறார். ஓ.பன்னீர்செல்வமும் பலரை நீக்குகிறார். அதிமுகவில் என்ன நடக்கிறது என்று கேட்கிறீர்கள். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, உடன் யாரும் இல்லாத சூழ்நிலையிலே அவர் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. அந்த கடிதத்தில் சென்ற வருடம் நீக்கியுள்ளதாக இருக்கிறது. இதைக்கூட கவனிக்கவில்லை என்று பார்க்கின்றபோது அவர் மனம் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரிகிறது.

சர்வாதிகாரிபோல எடப்பாடியார் செயல்படுகிறார் என்று ஓபிஎஸ் கூறுகிறார். தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்று சொல்வார்கள். ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று சொல்கிறார். அவரை நீக்கும்போதுகூட பொங்கவில்லை. அவர் மகனை நீக்கும்போது வெடித்துவிட்டார். நாடாளுமன்ற தொகுதியில் அனைத்து தொகுதிகளும் வெற்றிபெற வேண்டிய வேலையைதான் பார்த்திருக்க வேண்டும். மகன் மட்டும் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணம்தானே அவருக்கு இருந்தது. அவர் மகனை நீக்கியதற்கு மட்டும் பொங்குகிறார்.

தனித்தன்மை எப்போதும் அதிமுகவிற்கு உண்டு. அந்த தனித்தன்மையை என்றைக்கும் அதிமுக இழக்காது. உறவுக்கு கைகொடுப்போம். உரிமைக்கு குரல் கொடுப்போம். ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரையில் அவர் அதிமுகவில் இல்லை. அவர் எந்த கட்சிக்கு சென்றால் என்ன, எங்களுக்கு அதுபற்றி கவலை இல்லை. அவர் பாஜ கட்சிக்கும் போகலாம். அவரின் உரிமையில் நான் தலையிட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : AIADMK ,Former minister ,Jayakumar , AIADMK, Edappadi, Former Minister Jayakumar,
× RELATED ராயபுரத்தில் 25 ஆண்டு முடிசூடா மன்னனாக...