சென்னை: கடந்த 2020ம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய நிறுவன பணியாளர்கள் பணி நிபந்தனை விதிகளின் கீழ் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் அர்ச்சகர்கள் நியமனத்துக்கு தடை விதிக்க கோரி, ம.பி.யை சேர்ந்த ஜகத்குரு ராமநாதாச்சார்யா சுவாமி ராம்பத்ராச்சார்யா துளசி பீட சேவா நியாஸ் மற்றும் டெல்லி, உத்தரபிரதேசம், பெங்களூருவைச் சேர்ந்த 8 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்கள் எவை என அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் விளக்கமளித்தார். இதையடுத்து, தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்கள் எவை என்று அடையாளம் காண, ஆகம விதிகள் தெரிந்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு மாதத்தில் தமிழக அரசு குழு அமைக்க வேண்டும்.
அர்ச்சகர்கள் நியமனத்தை பொறுத்தவரை, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஆகம விதிகளின்படி நியமிக்க வேண்டும். விதிமீறல் இருந்தால் தனிப்பட்டவர்கள் வழக்கு தொடரலாம் என்று உத்தரவிட்டனர். அப்போது அட்வகேட் ஜெனரல், உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி துரைசாமி ராஜூவை பரிந்துரைத்தார். இதை கேட்ட நீதிபதிகள், இது சம்பந்தமாக பதிலளிக்குமாறு மனுதாரர்கள் தரப்புக்கு உத்தரவிட்டனர்.