×

அண்ணாநகர் மண்டலத்தில் உள்ள மாநகராட்சி அம்மா அரங்கத்தில் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு அனுமதி: முன்பதிவு செய்து பொதுமக்கள் பயன்படுத்தலாம்

சென்னை: அண்ணாநகர் மண்டலத்தில் உள்ள அம்மா அரங்கத்தில் குடும்ப நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்து பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
 இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், ஷெனாய் நகர், 8வது குறுக்கு தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான அம்மா அரங்கம் அமைந்துள்ளது. இதில், 19,890 சதுர அடி பரப்பளவில் கீழ்த்தளம் வாகன நிறுத்தவும், 19,890 சதுர அடி பரப்பளவில் 900 இருக்கைகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட தரைத்தளமும், 4,286 சதுர அடி பரப்பளவிலான இடைப்பட்ட தளத்தில் உள்ள அறைகள் நிகழ்ச்சி முன்பதிவு செய்பவர்களின் உபயோகத்திற்காகவும் மற்றும் 19,890 சதுர அடி பரப்பளவிலான முதல் தளம் உணவுக் கூடமும் அமைக்கப்பட்டுள்ளது.  

இந்த அரங்கத்தில் மின் தூக்கி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு பொதுமக்களின் குடும்ப சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், கண்காட்சி, பள்ளி, கல்லூரிகள் நடத்தும் உள்விளையாட்டு போட்டி, பரிசளிப்பு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் முன்பதிவு செய்யப்படுகிறது.
 
அம்மா அரங்கத்தின் குளிரூட்டப்பட்ட தரைத்தளத்தில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் கூட்ட நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டு வந்தது. தற்போது, பொதுமக்களின் நலன் கருதி இனி வருங்காலங்களில் குடும்ப நிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதி வழங்கப்படும்.
 
இந்த அரங்கத்தில் நிகழ்ச்சிகள் நடத்த முன்பதிவு செய்பவர்களுக்கு நாளொன்றுக்கு வாடகை ரூ.2,28,440 எனவும், அரை நாள் வாடகை ரூ.1,14,220 எனவும் (ஜி.எஸ்.டி வரி, மின் கட்டணம் மற்றும் தூய்மைக் கட்டணம் நீங்கலாக) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த அரங்கத்துடன் 3,683 சதுர அடி பரப்பளவில் உணவு தயார் செய்யும் கூட வசதியுடன் இரண்டு தளம் கொண்ட கட்டிடம் அமைக்கப்பட உள்ளது.

மேலும், அரங்கத்திற்கு உணவு கொண்டு செல்ல இணைப்பு பால வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது. தற்போது, சமையல் கூட வசதி முழுமையாக ஏற்படுத்தப்படும் வரை குடும்ப சுப நிகழ்ச்சிகளுக்கு முன்பதிவு செய்து வெளியிலிருந்து உணவுப் பொருட்களை வரவழைத்து உணவருந்த அனுமதிக்கப்படும். மேலும், முகூர்த்த தினங்கள் தவிர இதர நாட்களில் வணிக நோக்கத்துடன் செயல்படும் நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி வழங்கப்படும்.
ஒன்றிய அரசு மற்றும் ஒன்றிய அரசு சார்ந்த நிறுவனங்கள், இதர பொதுத் துறை நிறுவனங்களால் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட வாடகை தொகையில் 50 சதவீதம் சலுகையுடன் இதர கட்டணங்கள் செலுத்துவதற்கு சலுகை வழங்கப்படுகிறது.  
 
தமிழக அரசு மற்றும் அரசு பொதுத் துறை நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட வாடகைத் தொகை தவிர்த்து, இதரக் கட்டணங்கள் மட்டும் செலுத்துவதற்கு சலுகை வழங்கப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் ஊழியர், ஊழியரின் வாரிசுதாரர்கள் மற்றும் கவுன்சிலர்களின் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு விதிமுறைகளுக்குட்பட்டு வாடகையில் 75 சதவீதம் சலுகை வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Corporation Amma Arangam ,Annanagar Mandal , Admission for family events at Corporation Amma Arangam in Annanagar Mandal: Can be used by public on reservation
× RELATED அண்ணாநகர் மண்டல பகுதிகளில் கால்வாய்...