இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் மகன் உட்பட 2 பேர் பண மோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் கடந்த ஏப்ரல் மாதம் பதவியேற்றார். அதற்கு முன்பாக அவர் மீதும், அவருயை மகன்கள் ஹம்ஸா, சுலைமான் மீதும் கடந்த 2020ம் ஆண்டு ஊழல் தடுப்பு சட்டம் மற்றும் பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த மாதம் 11ம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தபோது, அந்த நாட்டின் புலனாய்வு அமைப்பு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. அதில், ‘3 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. சுலைமான் தற்போது நாட்டில் இல்லை. அவர் வெளிநாட்டில் இருப்பதால் கைது வாரன்ட்டை செயல்படுத்த முடியவில்லை,’ என்று குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது சுலைமானை தேடப்படும் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.