மயிலாடுதுறை: மயிலாடுதுறை அடுத்துள்ள நீடூர் கிராமத்தில் இஸ்லாமியர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இதே பகுதியை சேர்ந்தவர் அமீனுல்லா(60). இவர் தனது வீட்டில் 6666 அத்தியாயங்களை கொண்டு, 19 பக்கத்தில் எழுதப்பட்ட கையடக்க குரான் ஒன்றை வைத்துள்ளார். இதன் காலத்தை அறிந்துகொள்ள அரசுக்கு மனு அனுப்பினார். உரிய நடவடிக்கை இல்லாததால், 1998ல் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். அப்போது இந்த குரான் குறித்து ஆய்வு மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து இந்த குரான் 17ம் நுற்றாண்டை சார்ந்தது என இந்திய தொல்லியல்துறை சான்றிதழ் வழங்கியது. ஆனால் 300 ஆண்டுக்கு மேல் இந்த குரானை எங்கள் குடும்பம் பாதுகாத்து வருகிறது. இந்தக்குரானின் காலம் அதிகமாக இருக்கும் என்பதால் இதை மீண்டும் ஆய்வு செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். அப்போது குரானின் சாம்பிள் எடுத்து அதனை ஆய்வு செய்யவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தொல்லியல்துறையினர் சாம்பிள் எடுக்க முன்வரவில்லை. உடனடியாக அமீனுல்லா குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தனர்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி நேற்று டெல்லியை சேர்ந்த முன்னாள் தொல்லியல்துறை அதிகாரி டாக்டர் கவாஜா, ரஹ்மான் மற்றும் சென்னையில் உள்ள இந்தியத்தொல்லியல்துறை கண்காணிப்பாளர் காளிமுத்து, வெற்றிச்செல்வி ஆகியோர் அடங்கிய குழு நீடூர் வந்தது. அமானுல்லா வீட்டில் இருந்த மிகச்சிறிய குரானை பார்த்து ஆய்வு மேற்கொண்டனர். இதன் முடிவை உச்ச நீதிமன்றத்தில்தான் அளிப்போம் என கூறி ஆய்வுக்குழுவினர் சென்றுவிட்டனர். மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ், இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் ஆய்வின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.