நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் வெள்ளம் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த 2 குழுக்களை அமைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக போல வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்து, சிலப்பகுதிகளில் சிறிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த 2 குழுக்களை அமைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேதங்களை ஆய்வு செய்து அவற்றை உடனடியாக சீரமைக்க வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களை நீலகிரிக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை வீரர்கள் 160 பேர் இரண்டு குழுக்களாக நீலகிரி மாவட்டத்திற்கு அனுப்பு வைக்கப்பட்டதாகவும், அரக்கோணத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.