பெரம்பூர்: ஐம்பொன் சிலை திருட்டு வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட மூவரை போலீசார் கைது செய்தனர். அயனாவரம் நேருஜி ஜோதி நகர் முதல் தெருவில் உள்ள பவானி எல்லையம்மன் கோயிலில் கடந்த மாதம் 13ம் தேதி ஐம்பொன் சிலை மற்றும் 4 கிராம் தாலி, சூலம் மற்றும் உண்டியல் பணம் ₹13 ஆயிரம் கொள்ளை போனது. இதேபோல், கடந்த மாதம் 25ம் தேதி ஓட்டேரி, கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள தேவி கருமாரியம்மன் கோயில் உண்டியலை உடைத்து ₹15 ஆயிரம் திருடு போனது. இந்த சம்பவங்கள் குறித்து ஓட்டேரி குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், பட்டாபிராம் பகுதியில் திருட்டு வழக்கில் கைதான அயனாவரம் பகுதியை சேர்ந்த தனுஷ், அஜித்குமார், சந்தோஷ் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து சிறையில் உள்ள அவர்களிடம் விசாரித்தனர். இதில், சிலை திருட்டு வழக்கில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில், முக்கிய குற்றவாளியான பெரம்பூர் சேமத்தம்மன் காலனியை சேர்ந்த 15 வயது சிறுவன் மற்றும் 16 வயது சிறுவன், திருவிக. நகர் கேசி.கார்டன் பகுதியை சேர்ந்த முகமது அப்பாஸ் (25) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ஐம்பொன் சிலை மற்றும் இரண்டு சூலம் பறிமுதல் செய்யப்பட்டது. கோயில் உண்டியல் பணத்தில் மது, கஞ்சா வாங்கி ஜாலியாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 சிறுவர்களை சீர்த்திருத்த பள்ளியிலும், முகமது அப்பாஸை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.