×

வள்ளலார் பெருந்தொண்டர் ஊரன் அடிகள் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: வள்ளலார் பெருந்தொண்டர் தவத்திரு ஊரன் அடிகள் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபை முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ஊரன் அடிகளார் (89). கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு நேற்று அவர் உயிரிழந்தார். ஊரன் அடிகள் 22.5.1933ல் திருச்சி மாவட்டம், சமயபுரம் நரசிங்கமங்கலத்தில் பிறந்தார். தமது 22ம் வயதில் சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம் நிறுவி, தமிழ்ச் சமயங்களை பற்றியும், சன்மார்க்க நெறி பற்றியும் ஆராய்ச்சி செய்ய தொடங்கினார்.

திருமணம் செய்து கொள்ளாமல் துறவு மேற்கொண்டார். 23.5.1968ல், வடலூரே இவரது வாழ்விடமாக மாறியது. 1970 முதல் வடலூர் சன்மார்க்க நிலையங்களில் அறங்காவலராக பணியாற்றியவர். அன்னதான திட்டத்திற்கு இவர் வகுத்த திட்டம், பெரும் வரவேற்பை பெற்றது. இமயம் முதல் குமரி வரை பலமுறை யாத்திரை செய்துள்ள ஊரன் அடிகள், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, தென்னாப்பிரிக்கா, மொரிஷியஸ், பிரான்ஸ், ஜெர்மனி, குவைத், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் சென்று வந்தவர்.

அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், வள்ளலார் பெருந்தொண்டர் தவத்திரு ஊரன் அடிகள் உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்று அறிந்து மிகவும் வருந்துகிறேன். நூலாசிரியராக மட்டுமின்றி உரையாசிரியராகவும் சொற்பொழிவாளராகவும் நிலைத்த புகழை ஈட்டியவர். முத்தமிழறிஞர் கலைஞர் மீதும், என் மீதும் மிகுந்த பற்றும் மதிப்பும் கொண்டிருந்தார் ஊரன் அடிகள். அன்னாரது மறைவு சமயப் பற்றுடையோர்க்கு மட்டுமன்றி, சமய நல்லிணக்கத்தில் ஈடுபாடு கொண்ட அனைவருக்குமே ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும். அவரது மறைவால் துயருற்றுள்ள அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Tags : Perundondar Uran ,M.K.Stal , Death of Vallalar Perundondar Uran: Chief Minister M.K.Stal's condolence
× RELATED படிவம் 20ல் கையொப்பமிட்டு வெற்றி...