×

ஏட்டிக்குப் போட்டியாக அதிரடி நீக்கங்கள் ஓபிஎஸ் அணியில் 18, இபிஎஸ் அணியில் 22; பன்னீர்செல்வத்தின் 2 மகன்களுக்கு அங்கே கல்தா: எடப்பாடி, வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோருக்கு இங்கே கல்தா

சென்னை: ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோரை தொடர்ந்து அதிமுகவின் 5 மாவட்ட செயலாளர்கள், ஓபிஎஸ் மகன்கள் உள்ளிட்ட 18 அதிமுக நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி நீக்கி நேற்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி உள்ளிட்ட 22 பேரை கட்சியில் இருந்து நீக்கவதாக பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இரு அணியினரும் மாறி, மாறி கட்சி நிர்வாகிகளை நீக்குவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி கடந்த 11ம் தேதி தேர்வு செய்யப்பட்டார். இதற்கு, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை எதிர்த்து ஓபிஎஸ் சார்பில் நீதிமன்றம், தேர்தல் ஆணையம், வங்கி, சபாநாயகர் ஆகியோரிடம் புகார் மனு அளித்துள்ளார். அதில், தற்போதும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளராக நான் (ஓபிஎஸ்) நீடிக்கிறேன். அதனால், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது. மேலும், எடப்பாடி சார்பில் எடுத்து வரும் கட்சி நடவடிக்கைகளுக்கு எனது ஒப்புதல் இல்லாமல் அனுமதி அளிக்க கூடாது என்று கூறியுள்ளார். ஆனாலும், எடப்பாடி தரப்பினர் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். முதலில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டார். இதற்கு ஓபிஎஸ் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த அறிவிப்பு செல்லாது என்று பன்னீர்செல்வம் கூறினார். அதோடு எடப்பாடி பழனிச்சாமி, கே.பி.முனுசாமி ஆகியோர் நீக்கப்படுவதாகவும் பன்னீர்செல்வம் அறிவித்தார்.

இந்நிலையில், மேலும் அதிரடி நடவடிக்கையாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக செயல்படும் திருச்சி, தேனி, பெரம்பலூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி ஆகிய 5 அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் இரண்டு மகன்கள் (ரவீந்திரநாத் எம்பி, ஜெயபிரதீப்) மேலும் 11 நிர்வாகிகள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பதவிகளிலும் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்ட காரணத்தாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல் பட்ட காரணத்தினாலும், வி.என்.பி.வெங்கட்ராமன் (அதிமுக வர்த்தக அணி செயலாளர்), இரா.கோபாலகிருஷ்ணன் (தேர்தல் பிரிவு இணை செயலாளர்), வெல்லமண்டி நடராஜன் (திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் - முன்னாள் அமைச்சர்), எஸ்.பி.எம்.சையதுகான் (தேனி மாவட்ட செயலாளர்), ஆர்.டி.ராமச்சந்திரன் (பெரம்பலூர் மாவட்ட செயலாளர்), எம்.ஜி.எம்.சுப்பிரமணியன் (தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர்), எஸ்.ஏ.அசோகன் (கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர்), ஓம்சக்தி சேகர் (புதுச்சேரி மேற்கு மாநில செயலாளர்), ப.ரவீந்திரநாத் எம்பி (தென் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் - ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்), வி.ப.ஜெயபிரதீப் (தேனி மாவட்டம் - ஓ.பன்னீர்செல்வம் மகன்), கோவை செல்வராஜ் (செய்தி தொடர்பாளர்), மருது அழகுராஜ் (செய்தி தொடர்பாளர்), அம்மன் பி.வைரமுத்து (சென்னை புறநகர் மாவட்ட துணை செயலாளர்), டி.ரமேஷ் (ஜெயலலிதா பேரவை துணை செயலாளர்), பி.வினுபாலன் (தகவல் தொழில்நுட்ப பிரிவு திருச்சி மண்டல செயலாளர்), கொளத்தூர் டி.கிருஷ்ணமூர்த்தி (வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர்), சைதை எம்.எம்.பாபு (தென்சென்னை தெற்கு மாவட்ட முன்னாள் செயலாளர்), எஸ்.ஆர்.அஞ்சுலட்சமி (வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட மகளிர் அணி செயலாளர்) ஆகியோர் இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். அதிமுக தொண்டர்கள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

22 பேர் கட்சியில் இருந்து நீக்கம்: எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைக்கு பதிலடியாக அவரது அணியை சேர்ந்த 22 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு அறிவித்துள்ளார். அதில், எடப்பாடி பழனிச்சாமி, கே.பி.முனுசாமி, மாவட்டச் செயலாளர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, ஆதிராஜாராம், ராஜன்செல்லப்பா, ஜெயக்குமார், இளங்கோவன், ஜக்கையன், சி.வி.சண்முகம், ஓ.எஸ்.மணியன், தி.நகர் சத்தியா, விருகை ரவி, கந்தன், அசோக் மற்றும் வளர்மதி, கோகுல இந்திரா ஆகிய 22 பேர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக கூறியுள்ளார். இரு அணியினரும் போட்டி போட்டு மூத்த நிர்வாகிகளை நீக்கி வருவது கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், எடப்பாடி பழனிச்சாமி, கே.பி.முனுசாமி, வளர்மதி, கோகுல இந்திரா ஆகிய 4 பேரைத் தவிர மற்ற 18 பேரும் மாவட்டச் செயலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Aeti ,EPS ,Kalta ,Panneerselvam ,Edapadi ,Velmani ,Thangamani , 18 in the OPS team and 22 in the EPS team. Kaltha for Panneerselvam's 2 sons: Edappadi, Velumani, Thangamani etc.
× RELATED தேர்தலில் இபிஎஸ் அணி தோல்வி உறுதி என...