×

இலங்கையில் அரசியல் குழப்பம் நீடிப்பதால் கொழும்புவில் நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு: இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே அறிவிப்பு

கொழும்பு: இலங்கையில் அரசியல் குழப்பம் நீடிப்பதால் கொழும்புவில் நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ஆகியவற்றால் மக்கள் பெரும் அல்லலுக்கு ஆளாகியுள்ளனர். நிதி நெருக்கடியால், உணவு, மருந்து பொருட்கள் மற்றும் எரிபொருட்களை விலை கொடுத்து வாங்க முடியாத சூழ்நில் நிலவிவருகிறது.

இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவிக்கரம் நீட்டி வருகிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ளபொருளாதார நெருக்கடியால் மக்கள் பல மாதங்களாக போராட்டம் நீடித்து வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த 9-ம் தேதி இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்பின்னர், கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். எனினும், போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பி சென்று விட்டார். அவர் எங்கிருக்கிறார் என தெரியாத நிலையில், கோத்தபயா தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு ராணுவ விமானத்தில் தப்பி சென்று விட்டார் என தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து இலங்கையின் இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நெருக்கடி நிலை உத்தரவை பிறப்பித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, நாட்டின் மேற்கு மாகாணத்திலும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.

இன்று கலையுடன் அந்த ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறப்பட்ட நிலையில், இலங்கையின் அசாதாரண நிலையை கருத்தில் கொண்டு அசம்பாவிதங்களை தடுக்க கொழும்புவில் இன்று மதியம் 12 மணி முதல் நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.


Tags : Colombo ,Sri Lanka ,Interim President ,Ranil Wickremesinghe , Sri Lanka, Curfew, Ranil Wickramasinghe
× RELATED இலங்கை கார் பந்தய விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாப பலி, 23 பேர் படுகாயம்