நீடாமங்கலம்: நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தொழில்நுட்ப வல்லுநர் கமலசுந்தரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஆரோக்கியம் மற்றும் செழுமைக்கான மீன் என்ற கருப்பொருளின் கீழ் வருகிற 16ம் தேதி விவசாய பெருமக்களிடம் மீன் தொழிலின் சிறப்பு, அதனால் ஏற்படக் கூடிய வருமானம் போன்றவற்றை எடுத்துக்கூற உள்ளோம். மீன்பிடித்துறையானது பல துணை தொழில்களின் வளர்ச்சியை தூண்டுவதோடு மலிவான மற்றும் சத்தான உணவு என்ற பட்டியலில் முதலிடம் வகித்துள்ளது. மீன் புரதச்சத்து நிறைந்த உணவாகும். கொழுப்பும் குறைவாக உள்ளதால் இதில் அடங்கியுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உடல் ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன. நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.தற்போது சுமார் 40 சதம் மக்கள் குறைந்த அளவு வைட்டமின் ‘டி’ ஐ கொண்டுள்ளனர். இது அதிக ஆபத்துள்ள இதய நோய், நீரிழிவு, புற்றுநோய் டிமென்சியா போன்ற சில நோய்களை வராமல் தடுக்கக்கூடிய சக்தி வைட்டமின் டி உள்ளதால் இதனை சூரிய ஒளியில் இருந்து பெறுவதை காட்டிலும் வைட்டமின் டி நிறைந்த உணவுகளான மீனிலிருந்தும் எடுத்துக் கொள்ளலாம். இதனால் இதய நோய் தாக்குதலை குறைக்கிறது.
கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மீன் உணவை உண்பதால் குழந்தைகள் நல்ல மூளை வளர்ச்சியுடனும், நல்ல கண் பார்வையுடனும் இருப்பதாக ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. ரத்தக் கட்டிகள் உருவாகுவதை தடுத்து பக்கவாதம் வராமல் பாதுகாக்கிறது. வயதானவர்களுக்கு ஏற்படும் ஞாபகசக்தி குறைவை நீக்குகிறது. மன அழுத்தத்தை குணப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. சளி காய்ச்சல் மற்றும் இருமல் போன்றவை தாக்காமல் உடலை பாதுகாக்கிறது. இத்தகைய மீனை நாம் ஒருமுறை அல்லது இரண்டு முறையாவது மீன் சாப்பிடுவதை ஊட்டச்சத்து வல்லுனர்கள் பரிந்துரைக்கின்றனர்.மேலும் மீன்களை சமைக்கும் விதம் முக்கியமானது. மீனில் உள்ள அத்தனை சத்துக்களும் உடலில் சேருமாறு சமைக்க வேண்டும். அதற்கு நாம் கொழுப்பில்லாத மீன்களை தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் அதனை வேக வைத்தோ அல்லது ஆவியில் வேக வைக்கும் முறையை பயன்படுத்தினால் நல்ல ஒரு ஊட்டச்சத்து உணவாகும். மதிப்பு ஊட்டப்பட்ட பொருட்களான சட்னி பவுடர், மீன் அப்பளம், மீன் சாக்லேட், மீன் உருண்டை மற்றும் பிஷ் பிங்கர் போன்றவை தயாரித்து வருமானத்தையும் பெருக்க இயலும்.
ஒரு சிறந்த உணவு ஊட்டச்சத்து உணவாக மட்டுமின்றி இந்த மீன் தொழிலானது நாட்டின் வளர்ச்சியில் மிகவும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மீன்பிடி என்பது இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் துறையாகும். இது 28 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு வருமானம் மற்றும் வேலை வாய்ப்பை வழங்குவதோடு நாட்டின் ஒரு பெரிய ஊட்டச்சத்து மற்றும் உணவு பாதுகாப்பையும் வழங்குகிறது. உலகின் இரண்டாவது பெரிய மீன் உற்பத்தி செய்யும் நாடான இந்தியா உலக உற்பத்தியில் 7.5 சதவீதம் நாட்டின் மொத்த மதிப்பு கூட்டுதலுக்கு பங்களிக்கிறது. மீன்பிடி மற்றும் மீன் வளர்ப்பு மில்லியன் கணக்கான மக்களுக்கு உணவு ஊட்டச்சத்து வருமானம் மற்றும் வாழ்வாதாரத்தில் முக்கிய ஆதாரமாக தொடர்கிறது. மீன் புரதத்தின் மலிவு மற்றும் வளமான ஆதாரமாக இருப்பதால் இதன் ஏற்றுமதியை இரட்டிப்பாக்குவதற்கான அபரிமிதமான ஆற்றலை அரசாங்கம் கொண்டுள்ளது. நிலையான பொறுப்பான உள்ளடக்கிய மற்றும் சமமான முறையில் அதன் வளர்ச்சியை விரைவுப்படுத்துவதற்கு கொள்கை மற்றும் நிதி உதவி மூலம் மீன்பிடித் துறைக்கு நிலையான மற்றும் கவனம் செலுத்துவது அவசியம்.
மேலும் காவிரி டெல்டா தமிழகத்தின் நெற்களஞ்சியம் நெல் அதிக பரப்பளவில் விளைந்துள்ளது. தமிழகத்தில் உணவு பாதுகாப்பில் பங்களிக்கிறது. தமிழகத்தின் மற்றொரு தனிச்சிறப்பு உள்நாட்டு மீன் வளமாகும். காவிரி டெல்டாவில் அதிக அளவான நீர் நிலைகள் பாசனங்கள் இருப்பதால் மீன் வளர்ப்பது விவசாயிகளின் ஒரு வாழ்க்கை முறையாகவே ஆகிவிட்டது. நெல் மற்றும் மீன் வளர்ப்பு அதிக லாபம் ஈட்டக் கூடியது மற்றும் வளங்களையும் மேம்படுத்தக்கூடியது. காவிரி டெல்டாவில் உள்ள பல மூத்த விவசாயிகள் நெல் மற்றும் மீன் வளர்ப்பை இணைந்து செய்வதன் மூலம் நல்ல லாபம் சம்பாதிப்பதோடு வாழ்வாதாரத்தை அதிகரிக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் மீன் வளர்ப்பை பரவலாக்கி வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாதிரி பண்ணையையும் நிறுவி வருகிறது. இந்த மாதிரி பண்ணையில் பாரம்பரிய அரிசி வகைகள் ஆன மாப்பிள்ளை சம்பா, கவுனி போன்ற அரிசி வகைகளை வளர்த்து அதனுடன் மீனையும் சேர்த்து வளர்ப்பதற்கான ஒரு மாதிரி பண்ணையை நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் நிறுவி வருகிறது என வேளாண் விஞ்ஞானிகள் கூறினர்.