×

பர்வத மலையில் துறவி சடலம் மீட்பு : போலீசார் விசாரணை

கலசபாக்கம் : பர்வத மலையில் அடையாளம் தெரியாத துறவி சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவ மங்கலம் பகுதியில் பர்வத மலை உள்ளது. இந்த மலை மீதுள்ள மல்லிகார்ஜூனேஸ்வரர் கோயிலில், பவுர்ணமி நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். கிரிவலமும் செல்கின்றனர்.

இந்நிலையில், ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் முதல் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று, பர்வத மலை மீது ஏறிச்சென்று சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று காலை பர்வத மலை மீது ஏறி செல்லும் வழியில் 300வது படியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க துறவி ஒருவர் சடலமாக கிடந்தார்.

அவ்வழியாக சென்ற பக்தர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக கடலாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோயிலுக்கு செல்லும் வழியில் துறவிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து கடலாடி போலீசார் வழக்குப் பதிந்து இறந்து கிடந்த துறவி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? இறந்ததற்கான காரணம் என்ன? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Parvada , Parvatha Malai, Saint,Police Investigation
× RELATED 4560 அடி உயரமுள்ள பர்வத மலையில் இன்று...