புழல்: பஞ்செட்டி ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை நேற்று கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு செய்தார். சோழவரம் அருகே பஞ்செட்டி ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் சென்று ஆய்வு செய்தார். முதலில் 2 ஏக்கர் பரப்பளவில் கிணறு அமைக்கும் பணிகளை பார்வையிட்டார். பின்னர் கால்வாயில் இருந்து உபரிநீர் கால்வாய் சீரமைப்பு, குளத்தின் கரைகளை பலப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அங்குள்ள நூலக கட்டிடத்தை ஆய்வு செய்தார். பின்னர் ஊராட்சிக்கு உட்பட்ட அரசு நிலத்தில் பயிரிட்ட முருங்கைக்கீரை செடி செழிப்பாக வளர்ந்திருப்பதை பாராட்டினார்.
பின்னர் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி, ஜனப்பசத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கலெக்டர் ஜான் ஆல்பி வர்கீஸ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒரு வகுப்பறைக்கு சென்ற கலெக்டர், அங்கிருந்த மாணவர்களிடம் கரும்பலகையில் தமிழ் பெயர்கள் எழுதவும், கணக்கு பாடத்தில் கூட்டல் எண்கள் எழுதுவதில் திணறுவதை கலெக்டர் கண்டறிந்தார். பின்னர் மாணவர்களுக்கு பாடங்களை திறம்பட சொல்லி தரும்படி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது திட்ட இயக்குனர் ஜெயக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமிர்தமன்னன், குலசேகரன், ஊராட்சித் தலைவர்கள் பஞ்செட்டி சீனிவாசன், அழிஞ்சிவாக்கம் நந்தினி ரமேஷ், சோழவரம் லட்சுமி முனிஸ்வரன் உள்பட பலர் உடனிருந்தனர்.