×

கோத்தபய குடும்பத்துடன் மாலத்தீவுக்கு தப்பியது எப்படி?: பரபரப்பு தகவல்கள் அம்பலம்

மாலி: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு எப்படி தப்பிச் சென்றார், மாலத்தீவில் அவருக்கு ஆதரவு அளிப்பது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகினால், புதிய அரசால் கைது செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாகத்தான் அவர் பதவி விலகும் முன்பாகவே நாட்டிலிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். முதலில் அமெரிக்காவில் தஞ்சமடைவதே அவரின் திட்டமாக இருந்தது. ஆனால், அமெரிக்க விசா அவருக்கு மறுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மாலத்தீவை தொடர்பு கொண்டுள்ளார்.

மாலத்தீவின் முன்னாள் அதிபரும், தற்போதைய சபாநாயகருமான முகமது நஷீத், ராஜபக்சே குடும்பத்தினருடன் நெருக்கமாக இருப்பவர். 2012ம் ஆண்டு ஆட்சி இருந்து நஷீத் வெளியேற்றப்பட் போது, மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்த இலங்கையில் தான் அவர் தஞ்சமடைந்தார். அந்த விசுவாசத்தில் தற்போது கோத்தபயவுக்கு அவர் ஆதரவு தந்துள்ளார். முதலில் கோத்தபய சென்ற இலங்கை விமானப்படை விமானம் மாலேவின் வெலானா விமான நிலையத்தில் தரையிறங்க மாலத்தீவு விமான போக்குவரத்து ஆணையம் அனுமதி தரவில்லை. பின்னர், சபாநாயகர் நஷீத் தனிப்பட்ட முறையில்  பேசிய பிறகே, கோத்தபய சென்ற விமானம் தரை இறங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

கோத்தபயவுடன் அவரது மனைவி மற்றும் பாதுகாவலர்கள் உட்பட 13 பேர் சென்றுள்ளனர். அவர்கள் சென்ற ஏஎன்32 விமானம் அதிகாலை 3 மணி அளவில் மாலேவை சென்றடைந்துள்ளது. விமான நிலையத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோத்தபய ரகசியமாக இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், மாலத்தீவில் கோத்தபய தங்க மாட்டார், அவர் வேறொரு இடத்திற்கு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இலங்கையை போல மாலத்தீவும் சீனாவின் உத்தரவுக்கு கட்டுப்பட்ட நாடாக இருந்து வருகிறது. இதனால், சீனாவின் திட்டப்படி கோத்தபய மாலத்தீவில் தஞ்சமடைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மாலத்தீவிலும் விரட்டும் மக்கள்; மாலத்தீவில் கோத்தபய தஞ்சமடைந்துள்ள தகவல் பரவியதும், அந்நாட்டின் தலைநகர் மாலியில் உள்ள அதிபர் மாளிகை முன்பாக பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். ‘கோ கோத்தபய’ மற்றும் ‘குற்றவாளிகளுக்கு ஆதரவு தர வேண்டாம்’ என அவர்கள் பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தினர். இதனால், மாலத்தீவு அரசுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இன்னும் அவர் அதிபர்தான்: கோத்தபய ராஜபக்சேவுக்கு அடைக்கலம் கொடுத்தது குறித்து மாலத்தீவு அரசு தரப்பில் கூறப்படும் செய்தியில், ‘கோத்தபய ராஜபக்சே இன்னமும் இலங்கை அதிபராகத்தான் உள்ளார். அவர் பதவி விலகவில்லை. பதவியை வேறு யாருக்கும் ஒப்படைக்கவும் இல்லை. அப்படியிருக்கையில் மாலத்தீவு வர விரும்பும் இலங்கை அதிபரை நாங்கள் எப்படி தடுக்க முடியும்’ என கூறப்பட்டுள்ளது. அதே சமயம், கோத்தபய வருகை தொடர்பாக மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

அமெரிக்க தூதரகத்தில் 2 நாள் பணி நிறுத்தம்: அமெரிக்க தூதரகம் தனது டிவிட்டர் பதிவில், ‘கொழும்புவில் அசாதாரண சூழல் நிலவுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்க தூதரக பணிகள் 2 நாட்களுக்கு இடைக்காலமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. புதன் மற்றும் வியாழக்கிழமை இரு நாட்களும் அமெரிக்கர்களுக்கு வழங்கப்படும் சேவைகள் நிறுத்தப்படுகின்றன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Gotabaya ,Maldives , How Gotabaya escaped to Maldives with his family?: Exciting information revealed
× RELATED மேலும் பல இந்திய வீரர்கள்...