பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கரிம்பேடு கிராமத்தில் உள்ள சீரடி சாய்பாபா ஆலயம் சீரமைக்கப்பட்டு குரு பவுர்ணமி கும்பாபிஷேக விழா இரண்டு நாட்கள் வெகு விமர்சையாக நேற்று நடைபெற்றது. விழாவை யொட்டி ஆலய வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு கணபதி பூஜை, கோ பூஜை, வாஸ்து சாந்தி, தீபாராதனை உட்பட மூன்று கால பூஜைகள் நடைபெற்றது.
இந்நிலையில், நேற்று காலை பூர்ணாஹுதி பூஜைகள் தொடர்ந்து மேள தாளங்கள், சிவபூத வாத்தியங்கள், கேரளா செண்டை மேளம் முழங்க சிவாச்சாரியார்கள் புனிதநீர் கலசங்கள் எடுத்துச் சென்று கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது, கோவில் சுற்றி பெருந்திரளாக கூடியிருந்த பக்தர்கள் மீது கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீர் தெளிக்கப்பட்டது. இந்த விழாவில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சரும், நடிகை ஆர்.கே.ரோஜா பங்கேற்றார். அவருக்கு திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு வழங்கப்பட்டது.
இதனை அடுத்து நடைபெற்ற மஹா பூர்ணாஹுதி ஹோம பூஜைகளில் பங்கேற்ற அமைச்சர் ரோஜா சாமியை வழிபட்டார். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மஹா கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை கோயில் தலைவர் குமாரசாமி தலைமையில் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.