பெரியபாளையம்: குரு பவுர்ணமியை முன்னிட்டு ராள்ளபாடி சீரடி சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜைகள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள ராள்ளபாடி கிராமத்தில் அமைந்துள்ளது சீரடி சாய்பாபா திருக்கோயில். இங்கு குரு பவுர்ணமி விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 6 மணி அளவில் கணபதி பூஜையும் காலை7 மணி அளவில் கோவிலுக்கு வந்திருந்த திரளான பக்தர்களின் கைகளால் பாலாபிஷேகம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மகா கணபதி ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம், சாய் மகா சங்கல்பம் உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெற்றது. மேலும், காலை 8.55 மணி அளவில் ஆலய வளாகத்தில் சத்யநாராயண பூஜையும் நடைபெற்றது.
இதனை அடுத்து பாபாவிற்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மதியம் 12 மணி சிறப்பு ஆரத்தி எடுக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பாபாவின் பஜனை பாடல்களை பாடினார். இறுதியாக, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சிவா சாயி சேவா அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.